செஞ்சுரியன் : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தென்னாப்பிரிக்க மண்ணில் மிக மோசமான பேட்டிங் ரெக்கார்டை வைத்து இருக்கிறார்.
ஆனால், இந்த முறை நடக்க உள்ள இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் அவர் நிச்சயம் வேறு மாதிரியான ஆட்டத்தை ஆட இருக்கிறார். அதற்கு காரணம், இந்த முறை அவரது பேட்டிங் வரிசை மாறி இருப்பது தான்.

ரோஹித் சர்மா 2013 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் தென்னாப்பிரிக்க மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார். அதில் எட்டு இன்னிங்க்ஸில் 123 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதன் பேட்டிங் சராசரி 15.37 மட்டுமே. இது மிக மிக மோசமான பேட்டிங் ரெக்கார்டு ஆகும். ஆனால், அந்த எட்டு இன்னிங்க்ஸ்களிலும் ரோஹித் சர்மா 5 மற்றும் ஆறாவது பேட்டிங் வரிசையில் இறங்கி இருந்தார்.
2018க்கு பின் அவர் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த எந்த டெஸ்ட் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. ஐந்து ஆண்டுகள் கழித்து ரோஹித் சர்மா, தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறார். ஆனால், இடையே அவர் டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டரில் இருந்து துவக்க வீரராக மாறி விட்டார். துவக்க வீரராக மாறிய பின் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி உயர்ந்துள்ளது.
2019-20இல் இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக துவக்க வீரராக ரோஹித் சர்மா மூன்று சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே ஃபார்மில் அவர் ஆடினால் நிச்சயம் தென்னாப்பிரிக்க அணிக்கு பெரிய சிக்கல் தான். எனினும், தென்னாப்பிரிக்காவில் அத்தனை எளிதாக பேட்டிங் செய்ய முடியாது. ரோஹித் சர்மா அரைசதங்கள் அடித்தாலே இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக இருக்கும்.
இதுவரை தென்னாப்பிரிக்காவில் ரோஹித் சர்மாவை டெஸ்ட் அணி துவக்க வீரராக தென்னாப்பிரிக்க அணி பார்த்ததில்லை. எனவே, இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா துவக்க வீரராக அதிக ரன் குவித்தால் அதுவே இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றவும் காரணமாக அமையக் கூடும். இதுவரை இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்ததக்கது.