சென்னை: தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 350 ரன்கள் என்ற இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணி 11 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையிலும், நடுவரிசையில் விளையாடிய வீரர்கள் அபாரமாக ரன்களை சேர்த்ததார்கள்.
இதனால்,வெற்றியின் அருகே வந்து தோல்வியை தழுவியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், ராகுல் மற்றும் ஜடேஜாவின் பேட்டிங்கை பாராட்டினார். இது தொடர்பாக பேசிய அவர் விராட் கோலி இன்று நல்ல ஆட்டத்தை விளையாடினார். விராட் கோலியின் இந்த சதத்தால் ஜடேஜா மற்றும் ராகுலின் ஆட்டத்தை யாரும் கவனிக்காமல் சென்று விட்டனர்.

இறுதியில் இருவரும் இணைந்து அமைத்த பார்ட்னர்ஷிப்பால் தான் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய இன்னிங்ஸ் இன் கடைசி கட்டத்தில் இருவரும் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை சிதறடித்தனர். இதனால் நமக்குத் தேவையான இலக்கு கிடைத்தது. ஆனால் விராட் கோலியின் சதம் அனைத்தையும் மறைத்து விட்டது. எந்த ஒரு சத்தமும் இன்றி தங்களுடைய பணியை ராகுலும் ஜடேஜாவும் செய்து விட்டார்கள்.
ஆனால் வாஷிங்டன் சுந்தர் ஏன் ராகுலுக்கு முன்னால் பேட்டிங் செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை . ஒருவேளை ராகுல் பேட்டிங் வரிசையில் முன்பே களமிறங்கி இருந்தால் அது இந்தியாவின் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறி இருக்கும். என்னை பொருத்தவரையில் ராகுல் பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்திற்கு கீழ் பேட்டிங் செய்யக்கூடாது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அது ஒரு வெற்றிகரமான நகர்வாக இருந்திருக்கலாம்.
ஆனால் அதையே ஒரு பழக்கமாக நீங்கள் வைத்துக் கொள்ளக்கூடாது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் நம்பர் 4 அல்லது ஐந்தாவது இடத்தில் தான் ராகுல் பேட்டிங் செய்ய வேண்டும் என்றால் வாஷிங்டன் சுந்தரை நீங்கள் ஒரு ஃபினிஷராக பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். ஐந்தாவது இடம் அவருக்கு சரி வராது.
ரோல்ஸ் ராய்ஸ் ராகுல்தான் இந்தியாவின் வெற்றிக்கு காரணம். அவர் இல்லாமல் இந்தியா வெற்றி பெற்றிருக்க முடியாது. அவர் குவித்த 60 ரன்கள் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் எளிதாக வந்தது. குறிப்பாக பர்கர் பந்துவீச்சில் அவர் அடித்த சிக்சர் பிரமாதமாக இருந்தது. அதன் பிறகு ராகுலை யாராலும் தடுக்க முடியவில்லை. இதனால் ராகுலை நடுவரிசையில் களம் இறக்குங்கள். ஆறாவது இடத்தில் அவரை விளையாட வைப்பதற்கு பின்னால் இருக்கும் லாஜிக் எனக்கு சுத்தமாக தெரியவில்லை என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.