ராய்ப்பூர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட், தன்னுடைய முதல் ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்த நிலையில் செய்தியாளருடன் பேசிய அவர், தோல்வி குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். அது நாட்டாமை திரைப்படத்தில் செந்தில் சொல்வது போல்," சாரி மை சன் விதி விளையாடிருச்சி" என்ற காமெடி வருவது போல் அவருடைய பேச்சு அமைந்ததாக ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

முதலில் பேசிய அவர், நாங்கள் முதல் 10 ஓவர் வரை சிறப்பாகவே பந்து வீசினோம் ஆனால் அதன் பிறகு தென்னாப்பிரிக்க வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். அவர்களுக்கு எங்களுடைய பாராட்டுக்கள். 10 ஓவருக்கு பிறகு பனிப்பொழிவு மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் எங்களுடைய சுழற்பந்துவீச்சாளர்கள் போட்டியில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
அவர்கள் கிட்டத்தட்ட போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்றே சொல்லலாம். இதை பயன்படுத்திக் கொண்டு தென்னாப்பிரிக்க வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். கடந்த ஆண்டு நான் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சரியாக விளையாடவில்லை. ஆனால் இந்த ஆண்டு எந்தவித கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்று எனது மனதில் நான் தீர்மானம் எடுத்துக் கொண்டேன்.
சின்னப் போட்டியில் விளையாடினால் கூட ரன்கள் சேர்க்க வேண்டும் என்று முடிவு எடுத்து விளையாடினேன். தொடர்ந்து சிறப்பாக விளையாடுவோம், இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லை என்றால் கவலை இல்லை என்ற பாணியில் தான் நான் இருந்தேன்.
இந்த தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைத்த போது அணி நிர்வாகம் எனக்கு நம்பர் நான்காவது வீரராக களம் இறங்க வாய்ப்பு தருகிறோம் என்று சொன்னார்கள். நான் தொடக்க வீரராக இருக்கும்போது 40 ஓவர் மேல் நின்று விளையாடுவேன். இதனால் போட்டியின் நடுவில் எப்படி விளையாட வேண்டும் என்று நன்றாக தெரியும் என்பதால் நடு வரிசையில் விளையாடுவது எனக்கு எந்த ஒரு சிக்கலையும் ஏற்படுத்தவில்லை.
அணி நிர்வாகம் இந்த வாய்ப்பை வழங்கியதை நினைத்து பெருமை கொள்கின்றேன். விராட் கோலி எப்போதும் போல் சிறப்பாகவே வழி நடக்கிறார். இந்த ஒரு வாரமாக வெறும் பயிற்சி செய்யும் விதத்தை அருகில் இருந்து பார்க்கின்றேன். அதிலிருந்து நிறைய விஷயங்கள் என்னால் கற்றுக் கொள்ள முடிகிறது என்று ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.