விசாகப்பட்டினம்: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி ஆரம்பத்திலே ஆட்டத்தை கண்டது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களான ரியான் ரிக்கல்டன் மற்றும் குயிண்டன் டி காக் விளையாடினர்.

மதியம் நேரத்தில் இந்த தொடரில் முதல்முறையாக இந்திய அணி பந்து வீசுவதால் பனிப்பொழிவு என்ற நெருக்கடி இல்லாமல் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக ஆர்ஸ்தீப் சிங் தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார். இதன் காரணமாக ஆட்டத்தின் முதல் ஓவரில் ஐந்தாவது பந்தில் ஆர்ஸ்தீப் சிங் வீசிய பந்து ரியான் ரிக்கல்டன் அடிக்க முற்பட்டபோது அது விக்கெட் கீப்பரான ராகுலிடம் கேட்ச் ஆனது.
இந்த தொடரில் ரியான் ரிக்கல்டன் இரண்டாவது முறையாக டக் அவுட் ஆனார். இதை அடுத்து ஹர்ஷித் ராணாவும், ஆர்ஸ்தீப் சிங்கும் கட்டுக்கோப்பாக பந்து வீசி தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளை விட இந்த ஆடுகளம் கொஞ்சம் பேட்டிங்கிற்கும், பந்துவீச்சுக்கும் சரிசமமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இன்னும் சொல்லப்போனால் முதலில் பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் கொஞ்சம் தொய்வாக இருக்கும் என்றும் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது சாதகமாக மாறிவிடும் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு இந்த போட்டியில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
கடந்த இரண்டு போட்டிகளாக இந்திய அணி ஆறு பவுலர்களை பயன்படுத்தியது. ஆனால் இந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் இல்லாததால் 5 பவுலர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். தேவைப்பட்டால் ஜெய்ஸ்வால் அல்லது திலக் வர்மா ஆகியோர் சில ஓவர்களில் வீசலாம் என்பது குறிப்பிடத்தக்கது.