அகமதாபாத்: டி20 உலகக் கோப்பை 2026 சூப்பர் 8 சுற்றில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை சந்திக்கவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிக்கு முன்னதாக, முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் சபா கரீம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ககிசோ ரபாடா, லுங்கி எங்கிடி போன்ற தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் மணிக்கு 144-145 கி.மீ வேகத்தில் பந்துவீசுவார்கள் என்பதால், இந்திய பேட்ஸ்மேன்கள் புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். இந்திய பந்துவீச்சாளர்கள் குயின்டன் டி காக் மற்றும் எய்டன் மார்க்ரம் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும், தென்னாப்பிரிக்கா பலமான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது என்றும் கரீம் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து பேசிய சபா கரீம், "இந்தியா பேட்டிங் வரிசைக்கும், தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சுக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான மோதலைக் காண்போம். அவர்கள் மணிக்கு 144-145 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆட்டத்தில் சராசரி வேகம் 143 கி.மீ ஆக இருந்தது."
"ஆனால் அது இந்திய பேட்ஸ்மேன்களைப் பெரிதாகப் பாதிக்காது. இந்திய பேட்டர்ஸ் வேகப்பந்து வீச்சைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தவர்கள். தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு அச்சுறுத்தலை எதிர்கொள்ள இதுவே சிறந்த தயாரிப்பாக நான் கருதுகிறேன். குயின்டன் டி காக் ஏற்கனவே ஒரு அரைச்சதம் அடித்துள்ளார்."
"டி20 போட்டியில், நீங்கள் அதிக சிக்கல் நிறைந்த ஆட்டத்தை விளையாடுவீர்கள், அதனால் விக்கெட் இழப்புகள் ஏற்படும். அவரால் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு இன்னிங்ஸை விளையாட முடியுமா? ஆம், நிச்சயமாக. எய்டன் மார்க்ரம் ஒரு நிலையான வீரர். அவரது பேட்டிங் நிசங்காவை எனக்கு நினைவூட்டுகிறது," என்றார்.
டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக குயின்டன் டி காக் சிறப்பாக செயல்பட்டுள்ளார். 14 இன்னிங்ஸ்களில் 149.55 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 507 ரன்கள் குவித்து, ஆறு அரைச்சதங்கள் அடித்துள்ளார். எய்டன் மார்க்ரம் 14 இன்னிங்ஸ்களில் இரண்டு அரைச்சதங்கள் உட்பட 131.85 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 327 ரன்கள் குவித்துள்ளார்.
பந்துவீச்சில், லுங்கி எங்கிடி இந்திய அணிக்கு எதிராக ஒன்பது டி20 சர்வதேச போட்டிகளில் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ககிசோ ரபாடா 13 ஆட்டங்களில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த இருவரும் தங்கள் அதிரடி பந்துவீச்சால் இந்திய அணியின் டாப் ஆர்டரை மிரட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து பேவிய சபா கரீம், "இது ஒரு பரபரப்பான மோதல். கடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போட்டி மிகவும் நெருக்கமாக இருந்தது என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். அந்த ஆட்டத்தை வெல்ல தென்னாப்பிரிக்கா கடுமையாக முயன்றனர். ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் போன்றவர்களால் இந்தியா மீண்டு வந்து ஆட்டத்தை வென்றது. அதே அணிகள் மீண்டும் மோதுகின்றன, தென்னாப்பிரிக்கா வலியுடன் இருக்கும், அவர்கள் தங்களது ஏமாற்றத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்பார்கள்."
"அவர்கள் இந்த போட்டியை வெல்ல முயற்சிப்பார்கள். ஆனால் இரு அணிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இந்தியா அனைத்து அம்சங்களிலும் சிறந்த நிலையில் உள்ளனர். இத்தகைய சூழ்நிலைகளில் எந்தெந்த வீரர்கள் ஆட்டத்தை வெல்ல முடியும் என்பதை அறிவார்கள். அவர்களிடம் நிறைய மேட்ச் வின்னர்ஸ் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆட்டத்திலும் வெவ்வேறு வீரர்கள் 'ஆட்டநாயகன்' விருதுகளைப் பெறுகிறார்கள். இந்த அணி அனைத்து துறைகளிலும் சிறப்பாக இருப்பதால், தென்னாப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்துவது மிகவும் கடினம்," என்று அவர் கூறினார்.