பார்ல் : தமிழக வீரர் சாய் சுதர்ஷன் இந்திய அணியில் இடம் பெற்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சொதப்பலாக ஆடினார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா, சுப்மன் கில் உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், இந்த தொடரில் துவக்க வீரராக ஆடும் வாய்ப்பை பெற்றார் சாய் சுதர்ஷன்.

முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக துவக்கம் அளித்து இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்தார் அவர். முதல் போட்டியில் 117 ரன்களை சேஸிங் செய்த போது அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இரண்டாவது போட்டியில் 62 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில், அவர் 62 ரன்னில் ஆட்டமிழந்ததை சுட்டிக் காட்டிய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், இந்திய அணியில் கடும் போட்டி இருப்பதால் சாய் இனி வரும் போட்டிகளில் 50, 60 ரன்களை 100 ரன்களாக மாற்ற வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜாம்பவான் பேச்சைக் கேட்டு சாய் சுதர்ஷன் சதம் அடிப்பாரா? என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் வெறும் 10 ரன் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகிய நிலையில் அறிமுக வீரர் ரஜத் படிதார் துவக்க வீரராக களமிறங்கி 16 பந்துகளில் 22 ரன்கள் மட்டும் சேர்த்து ஆட்டமிழந்தார்.மறுபுறம் சாய் சுதர்ஷன் பொறுப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 16 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 7.3 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்து 2 விக்கெட்களை இழந்தது.
அதன் பின் கே எல் ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் திலக் வர்மா - சஞ்சு சாம்சன் ஜோடி கூட்டணி அமைத்து நிதானமாக ரன் சேர்த்தது. திலக் வர்மா 52, சஞ்சு சாம்சன் 108 ரன்கள் குவித்தனர். இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது. இந்தியா பெரிய ஸ்கோர் எடுத்ததால் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது பெரிய அளவில் விமர்சனத்தை சந்திக்கவில்லை.