அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் அணுகுமுறை குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், சூர்யகுமார் யாதவ் இப்படியே பேட்டிங் ஆடினால் அது ஆபத்தாக முடியும் என எச்சரித்து இருக்கிறார்.
அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, சூர்யகுமார் யாதவ் மிகவும் பொறுப்புடன் விளையாடி 84 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார். அந்தச் சூழலுக்கு அந்த நிதானமான ஆட்டம் மிகச்சரியாக இருந்தது. ஆனால், அதன் பிறகு வந்த போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் அதே பாணியில் அதிக நிதானம் காட்டுவது அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று மஞ்சுரேக்கர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "சூர்யகுமார் யாதவிடம் நான் கவனித்த ஒரு விஷயம் எனக்குப் பிடிக்கவில்லை. அமெரிக்கா போட்டிக்குப் பிறகு அவர் அதிகப்படியான எச்சரிக்கையுடன் விளையாடுகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சில விக்கெட்டுகள் விழுந்தவுடன், அவரும் திலக் வர்மாவும் மிகவும் மெதுவாக ரன் சேர்த்தனர்.
இப்படி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிக பந்துகளை வீணடித்து மெதுவாக விளையாடினால், பின்வரிசையில் வரும் ஹர்திக் பாண்டியா, சிவம் துபே மற்றும் ரிங்கு சிங் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களுக்குப் போதுமான பந்துகள் கிடைப்பதில்லை. அவர்களின் திறமையை முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் போகிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் ஒரு சீனியர் வீரரோ அல்லது கேப்டனோ, 'நான் தான் கடைசி வரை களத்தில் நின்று ரன் சேர்க்க வேண்டும்' என்று நினைத்துத் தடுப்பாட்டத்தில் ஈடுபடுவது மிகவும் ஆபத்தான உத்தி என்று மஞ்சுரேக்கர் கூறியுள்ளார்.
"ஒருவர் நிதானமாக ஆடுகிறேன் என்ற பெயரில் ஸ்ட்ரைக் ரேட்டைக் குறைப்பது, அணியின் ஒட்டுமொத்த ஸ்கோரை 200 ரன்களுக்குக் கொண்டு செல்வதைத் தடுக்கும். சூர்யகுமார் யாதவ் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்" என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தத் தொடரில் சூர்யகுமார் 164 ரன்கள் எடுத்திருந்தாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 136.13 ஆக மட்டுமே உள்ளது. ஆனால் இஷான் கிஷன் 200க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாகச் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் அணியில் சேர்க்கப்படலாம். அதேபோல், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மீண்டும் ஆடும் லெவனுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.