சென்சுரியன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் மீண்டும் டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார். இதன் மூலமாக ஒரே ஆண்டில் 5 முறை டக் அவுட்டான வீரர் என்ற புதிய சாதனையை சஞ்சு சாம்சன் படைத்திருக்கிறார்.
இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும், பயிற்சியாளராக கவுதம் கம்பீரும் பொறுப்புக்கு வந்த பின், டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனுக்கு சீரான வாய்ப்பு அளிக்க முடிவு எடுக்கப்பட்டது. அதற்கேற்ப நட்சத்திர வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த, அவரை தொடக்க வீரராக பயன்படுத்தலாம் என்று முடிவு செய்து அவருக்கும் அறிவுறுத்தினர்.

அதற்கேற்ப வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்கினார். முதல் 2 போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை என்றாலும், கடைசி டி20 போட்டியில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதன்பின் மீண்டும் தென்னாப்பிரிக்கா டி20 தொடரிலும் அவருக்கு தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
முதல் டி20 போட்டியிலேயே அதிரடியாக விளையாடி சதம் விளாசிய சஞ்சு சாம்சன், தொடர்ச்சியாக 2 போட்டிகளில் சதம் விளாசிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இதன்பின் 2வது டி20 போட்டியில் களமிறங்கிய சஞ்சு சாம்சன், யாரும் எதிர்பார்க்காத வகையில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். நடப்பாண்டில் மட்டும் டி20 கிரிக்கெட்டில் 4வது முறையாக ஆட்டமிழந்தது சில விமர்சனங்களை பெற்றது.
இருப்பினும் நல்ல பேட்டிங் ஃபார்மில் சஞ்சு சாம்சன் இருப்பதாகவே பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. வழக்கம் போல் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸை இழக்க, தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்பின் சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் மார்கோ யான்சன் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் 2வது பந்திலேயே சஞ்சு சாம்சன் போல்டாகி ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியனுக்கு நடையை கட்டினார். தொடர்ச்சியாக 2 சதங்களை விளாசிய சஞ்சு சாம்சன், தற்போது தொடர்ச்சியாக 2 முறை டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் சஞ்சு சாம்சனை மீண்டும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே கன்சிஸ்டன்சி சிக்கலில் தவித்து வந்த சஞ்சு சாம்சன், டி20 கிரிக்கெட்டில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நடப்பாண்டில் டி20 கிரிக்கெட்டில் மட்டும் சஞ்சு சாம்சன் 5வது முறையாக டக் அவுட்டாகி இருக்கிறார். இதன் மூலமாக ஒரே ஆண்டில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார்.