மும்பை : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சதம் அடித்த சஞ்சு சாம்சனை பாராட்டித் தள்ளி இருக்கிறார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் பொறுப்பாக ஆடி அணியின் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியதோடு தன் முதல் சர்வதேச சதம் அடித்தார்.
இந்தப் போட்டியில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் ஆட வந்தார் சஞ்சு சாம்சன். அப்போது துவக்க வீரர்கள் ஆட்டமிழந்ததோடு பேட்டிங் வரிசையில் இடம் பெற்று இருந்த ஒரே ஒரு அனுபவ பேட்ஸ்மேன் கே எல் ராகுலும் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அந்த நிலையில் திலக் வர்மாவுடன் இணைந்து நிதான ஆட்டம் ஆடி பின் கடைசி 15 ஓவர்களின் போது வேகம் எடுத்தார் சஞ்சு சாம்சன். 114 பந்துகளில் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது சதம் காரணமாக இந்திய அணி 50 ஓவர்களில் 296 ரன்கள் குவித்தது.
சுமார் 8 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறுவதும் பின் நீக்கப்படுவதுமாக இருந்து வந்த சஞ்சு சாம்சன் கிரிக்கெட் வாழ்வை இந்த சதம் மாற்றப் போகிறது என சுனில் கவாஸ்கர் கூறி இருக்கிறார். இந்த சதத்தால் இரண்டு விஷயங்கள் நடைபெறும் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
சஞ்சு சாம்சன் சதம் குறித்து கவாஸ்கர் பேசுகையில், "அவரது ஆட்டத்தில் சிறப்பாக இருந்தது அவரின் ஷாட் தேர்வு தான். இதற்கு முன் அவர் பல முறை நல்ல துவக்கம் கிடைத்தும் ஆட்டமிழந்து இருக்கிறார். ஆனால், இன்று அவரை நாம் குறை சொல்ல முடியாது. தனக்கான நேரத்தை எடுத்துக் கொண்டார். தவறான பந்துகளை மட்டும் அடித்து சதம் அடித்து இருக்கிறார்" என்றார்.
மேலும், "இந்த சதம் அவரது கிரிக்கெட் வாழ்வையே மாற்றப் போகிறது. இனி இரண்டு விஷயம் நடக்கும். முதல் விஷயம் இந்த சதம் காரணமாக அவருக்கு இனி அதிக வாய்ப்புகள் கிடைக்கும். இரண்டாவது விஷயம், சஞ்சு சாம்சன் தன்னைத் தானே நம்பத் துவங்குவார். சில சமயம் வாய்ப்பு கிடைத்தும் அதிர்ஷ்டம் இருக்காது. ஒரு நல்ல பந்து அல்லது அபாரமான கேட்ச் நம்மை வீழ்த்தும் போது நாம் இந்த இடத்துக்கு தகுதியான நபர் தானா என்ற சந்தேகம் எழும். ஆனால், இந்த சதம் இந்த இடத்துக்கு தகுதியான நபர் தான் என நம்பிக்கை அளிக்கும்." என்றார் கவாஸ்கர்.
மேலும், "அவர் இந்த இடத்துக்கு எப்போதும் தகுதியான நபர் தான். ஆனால், ஏதோ சில காரணங்களால் அவரால் சரியாக செயல்பட முடியாமல் இருந்தது. ஆனால், இன்று மற்றவர்களுக்காக மட்டுமின்றி தனக்காகவும் அவர் சாதித்து இருக்கிறார்" என்று சுனில் கவாஸ்கர் பாராட்டிப் பேசினார்.