பார்ல் : இனி இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றால் சஞ்சு சாம்சன் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பெரிய இன்னிங்க்ஸ் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இந்திய அணியில் நீண்ட காலமாக வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த சஞ்சு சாம்சனுக்கு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அவருக்கு முதல் இரண்டு போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் ஆடும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. அந்த அரிய வாய்ப்பிலும் அவர் சொதப்பினார். அந்தப் போட்டியில் 23 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் குறைவாக ரன் எடுத்தார் என்பதை விட அவர் ஆட்டமிழந்த விதம் பெரிய விமர்சனத்தை சந்தித்தது. அவர் பந்தை சரியாக கணிக்காமல், இன்சைட் எட்ஜ் ஆகி ஆட்டமிழந்தார்.

சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த விதத்தை முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்தனர். தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே அவர் ஆட உள்ள நிலையில், அதுவே அவருக்கு கடைசி வாய்ப்பு. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியில் பெரிய மேஜிக் செய்யவில்லை என்றால் சஞ்சு சாம்சனுக்கு இனி சர்வதேச போட்டிகளில் வாய்ப்பே கிடைக்காமல் போகலாம்.
இந்திய அணி அடுத்து 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், ஒருநாள் தொடர்களில் இந்திய அணி இரண்டாம் கட்ட வீரர்களை மட்டுமே ஆட வைத்து வருகிறது. அப்படித் தான் சஞ்சு சாம்சனுக்கு ஒருநாள் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் முக்கியத்துவம் இல்லாத தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளித்தது அவ்ரியோ ஏமாற்றும் செயல் என கூறி வந்தனர். அதுதான் உண்மையும் கூட. ஆனால், கிடைத்த அந்த வாய்ப்பிலும் சஞ்சு சாம்சன் மோசமாக ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார். இனி மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் எடுக்கும் ரன்களை பொறுத்தே அவரது சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் அமையும்.