கேபெர்ஹா : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் சொதப்பலாக ஆடி பெரும் ஏமாற்றம் அளித்தார்.
மிகவும் திறமையான பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என ரசிகர்கள் பல ஆண்டுகளாக சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு முறை அவர் பெயர் அணியில் இடம் பெறாமல் போகும் போதும் கடும் விமர்சனம் எழும். ரசிகர்கள் மட்டுமின்றி சில முன்னாள் வீரர்கள் கூட அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டும் என குரல் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில், பெரிய முக்கியத்துவம் அற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் ஆறாம் வரிசை பேட்ஸ்மேனாக இடம் பெற்ற அவருக்கு பேட்டிங் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவருக்கு ஐந்தாம் வரிசையில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் சாய் சுதர்ஷன் 62, கே எல் ராகுல் 56 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்பலாக ஆடிய நிலையில், அணியை தூக்கி நிறுத்தும் அரிய வாய்ப்பு சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது.
ஆனால், அவர் கடினமான பிட்ச் என்பதால் மிக நிதான ஆட்டம் ஆடினார். 23 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவர் குறைவாக ரன் எடுத்ததை விட ஆட்டமிழந்த விதம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஹென்ரிக்ஸ் வீசிய பந்தை எந்த ஷாட் ஆடப் போகிறோம் என்ற தெளிவே இல்லாமல் தடுக்கவும் இல்லாமல், ஷாட் அடிக்கவும் முயலாமல், பேட்டை அவர் முன்னே கொண்டு வந்த போது, பந்து இன்சைடு எட்ஜ் ஆகி பவுல்டு அவுட் ஆனார்.
அவர் மோசமான முறையில் ஆட்டமிழந்ததால் அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் பெரிய இன்னிங்க்ஸ் ஆடினால் கூட இந்த ஒரு தவறை சுட்டிக் காட்டியே அவருக்கு இனி அணியில் இடம் கிடைக்காத நிலை ஏற்படக் கூடும். இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி நேரத்தில் அர்ஷ்தீப் சிங் 18, ஆவேஷ் கான் 9 ரன்கள் எடுக்கவே இந்தியா 200 ரன்களை கடந்தது.