மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டி20, 3 ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் உலக கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு ஒரு நாள் அணியில் இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் டெஸ்ட் மற்றும் டி20 அணியில் இடம் மறுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் பல காலமாக வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்த சஞ்சு சாம்சனுக்கு கடைசியாக ஒரு நல்லது நடக்க போகிறது. அந்த வகையில் ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் ஒரு நாள் தொடரில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பதால் ராகுல் டிராவிட் அவருக்கு தொடக்க வீரராக புதிய பொறுப்பை கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர்தான் தொடக்க வீரர்களாக உள்ளனர். இவர்களை தவிர வேறு யாரும் அந்த இடத்தில் இல்லை. கே எல் ராகுல் தற்போது நடு வரிசையில் விளையாடுவதால் அவரும் தொடக்க வீரராக வரமாட்டார். இதனால் சஞ்சு சாம்சன் கூடுதல் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் சாய் சுதர்சன் இளம் வீரர் என்பதால் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு சஞ்சு சாம்சனுக்கு தான் வழங்கப்படும் என தெரிகிறது.
இதில் சஞ்சு சாம்சன் தன்னுடைய திறமையை நிரூபித்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தால், ரோகித் சர்மா ஓய்வு பெற்ற பிறகு அந்த இடத்திற்கு சஞ்சு சாம்சன் களமிறங்க வாய்ப்பு வரலாம். இல்லையெனில் சஞ்சு சாம்சன் நம்பர் மூன்று அல்லது நான்காவது வீரராக விளையாட வாய்ப்பு தரப்படும்.
இந்தத் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு கிடைக்கும் வாய்ப்பு அவர் மட்டும் சரியாக பயன்படுத்திக் கொண்டால் இந்திய அணில் இருந்து அவரை நீக்குவதற்கு வாய்ப்பு இருக்காது. இதனால் தமக்கு கிடைத்த கடைசி வாய்ப்பை அவர் இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். டிராவிட் காட்டிய பெரிய மனசால் தான் சஞ்சு சாம்சனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.