இந்திய அணியின் டாப் ஆர்டரில் பல ஜாம்பவான் வீரர்கள் தொடர்ந்து விளையாடியதால், கடந்த சில ஆண்டுகளில் சஞ்சு சாம்சனுக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும், இன்று அவர் சதம் விளாசியது மகிழ்ச்சியளிப்பதாக கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 108 ரன்களும், இளம் வீரர் திலக் வர்மா 52 ரன்களும் சேர்த்தனர்.
இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 45.5 ஓவர்களில் 218 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா அணியின் இளம் வீரர் ஸோர்சி 81 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆவேஷ் கான் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது. அதேபோல் கடந்த முறை கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரில் தோல்வியடைந்த நிலையில், இம்முறை தொடரை வென்று சாதித்துள்ளார். இந்த போட்டியில் ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சனும், தொடர் நாயகனாக அர்ஷ்தீப் சிங்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த வெற்றி குறித்து கேப்டன் கேஎல் ராகுல் பேசுகையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு பின் மீண்டும் களத்திற்கு திரும்பியதே மகிழ்ச்சி தான். ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோருடன் ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். தற்போது தென்னாப்பிரிக்கா மண்ணிலும் அவர்களுடன் விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. வழக்கமாக முடிவை பற்றி கவலைப்படாமல் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுங்கள் என்பதே இளம் வீரர்களுக்கு எனது அட்வைஸாக இருக்கும்.
இது அவர்களின் முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்கும், அவர்களின் பணி என்ன என்பதை புரிய வைப்பதற்குமான நேரமாகவே பார்க்கிறேன். ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் மிகச்சிறந்த வீரராக இருப்பவர். ஆனால் டாப் ஆர்டரில் மிகச்சிறந்த வீரர்கள் விளையாடியதால், அவருக்கு போதுமான வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. அவர் இன்று விளையாடியதை பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.