பார்ல் : தன் முதல் சர்வதேச சதம் அடித்த சஞ்சு சாம்சன் அது குறித்து பேசுகையில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.
கடந்த ஒரு வருடமாக நிறைய விஷயங்கள் நடந்து வருவதாகவும், தான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடினமாக உழைத்து வந்ததாகவும் குறிப்பிட்டார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் அபாரமாக ஆடினார். தன் முதல் சர்வதேச சதம் கடந்தார். 114 பந்துகளில் 108 ரன்கள் அடித்து இருந்தார். கடினமான பிட்ச்சில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் பேட்டிங் செய்ய தடுமாறிய போது அவர் அடித்த சதம் அனைவராலும் முக்கியமானதாக பார்க்கப்பட்டு பாராட்டுக்களை குவித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியா பேட்டிங் ஆடி முடித்த பின் இடைவேளையில் தன் சதம் குறித்து நேரலையில் பேசினார் சஞ்சு சாம்சன். அப்போது தந்து மன நிலை குறித்து அவர் பகிர்ந்து கொண்டார். தான் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தான் சதம் குறித்து சஞ்சு சாம்சன் பேசுகையில், "மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறேன். இப்போதும் கூட உணர்ச்சிகளைக் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். இந்த சதத்தை அடித்ததில் மிக்க மகிழ்ச்சி. கடந்த ஒரு வருடமாக நிறைய விஷயங்கள் நடந்தன. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நிறைய வேலைகளைச் செய்தேன். அதன் பலனாக முடிவுகள் இப்போது என் பக்கம் செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்றார்.
மேலும், திலக் வர்மாவுடன் தான் அமைத்த கூட்டணி குறித்தும், அதற்காக என்ன திட்டமிடல் நடந்தது என்பது பற்றியும் விளக்கினார். திலக் வர்மா - சஞ்சு சாம்சன் பார்ட்னர்ஷிப் அமைத்து 100 ரன்களுக்கும் மேல் சேர்த்தனர். சரிவில் இருந்து அணியை மீட்டனர். திலக் வர்மா 52 ரன்களும், சாம்சன் 108 ரன்களும் சேர்த்து இந்திய அணி 50 ஓவர்களில் 296 ரன்கள் சேர்க்க காரணமாக இருந்தனர்.
அது குறித்து சாம்சன் பேசுகையில், "புதிய பந்தில் தென்னாப்பிரிக்க வீரர்கள் நன்றாக பந்து வீசினர். மேலும் பழைய பந்து மெதுவாகவும், பேட்டிங் செய்ய கடினமாகவும் இருந்தது. எனவே ராகுல் அவுட் ஆன பிறகு, மஹராஜ் நன்றாக பந்து வீசினார். அது அவர்களுக்கு சாதகமாக இருந்தது. ஆனால், நானும் திலக் வர்மாவும் நிதானமாக ஆட முடிவு செய்தோம். அணியில் கூடுதல் ஆல் ரவுண்டர் இருந்ததால் 40வது ஓவரில் இருந்து அதிரடி ஆட்டம் ஆடலாம் என்று நானும் திலக்கும் முடிவு செய்து ஆடினோம்" என்றார்.