பார்ல்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் சதம் விளாசிய பின், விராட் கோலியின் கொண்டாட்டத்தை ரிப்பீட் செய்தது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

அதுமட்டுமல்லாமல் கேரளா மாநிலத்தில் இருந்து இந்திய அணிக்காக சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். 2015ஆம் ஆண்டிலேயே இந்திய அணி ஒருநாள் அணியில் இடம்பிடித்தாலும், கடந்த 8 ஆண்டுகளில் வெறும் 16 போட்டிகளில் மட்டுமே சஞ்சு சாம்சன் விளையாடியுள்ளார்.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கு பின் சீனியர் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதால், சஞ்சு சாம்சனுக்கு ஒருநாள் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைத்தது. முக்கியமான நேரத்தில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், 114 பந்துகளில் 3 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 114 ரன்களை விளாசினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதத்தை விளாசிய சஞ்சு சாம்சன், தனது முஷ்டியை மடக்கி காட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அவரின் ஆட்டத்தை பார்த்து இந்திய அணி வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைகளை தட்டி பாராட்டினர். அதேபோல் அவர் ஆட்டமிழந்து சென்ற போது தென்னாப்பிரிக்கா வீரர்கள் பலரும் தேடி வந்து முதுகில் தட்டி பாராட்டினர்.
இந்த நிலையில் சதம் விளாசிய பின் சஞ்சு சாம்சன், இந்திய அணியின் விராட் கோலியின் கொண்டாட்டத்தை ரிப்பீட் செய்திருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 2015ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சதம் விளாசிய பின் முஷ்டிடை மடக்கி தனது பைசப்ஸை காட்டி கொண்டாடுவார். அதேபோல் சஞ்சு சாம்சன் நம்பர் 3ல் அதே அணிக்கு எதிராக சதம் விளாசி கொண்டாடியது தெரிய வந்துள்ளது.