டர்பன்: 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக செய்த கடின உழைப்பிற்கான பலனை சஞ்சு சாம்சன் அனுபவித்து வருகிறார் என்று இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். அதேபோல் தென்னாப்பிரிக்காவின் அதிரடி வீரர்களான கிளாசன் மற்றும் மில்லர் ஆகியோரின் விக்கெட்டை ஸ்பின்னர்கள் வீழ்த்தியது அற்புதமான ஒன்று என்றும் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 17.5 ஓவர்களில் 141 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.

இந்த வெற்றியின் மூலமாக 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று 3ம் அட்டகாசமாக இருந்தது. இதன் மூலமாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கேப்டன்சி பொறுப்பை ஏற்ற பின் ஒரு தோல்வியை சந்திக்காமல் தொடர்ந்து வருகிறார்.
இந்த வெற்றி குறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், டர்பன் மைதானத்தில் இந்திய அணி தொடர்ச்சியாக வென்று வருவது குறித்து எந்த தகவலும் தெரியாது. கடந்த 3 முதல் 4 டி20 தொடர்களாகவே இந்திய அணியின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்த வெற்றியால் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக சஞ்சு சாம்சனின் கடின உழைப்பிற்கு தற்போது பலன் கிடைத்து வருகிறது.
அவர் 90 ரன்களுக்கு மேல் சேர்த்திருந்த போதும், மீண்டும் பவுண்டரிகளை விளாசவே முயற்சித்தார். சுயநலமின்றி இந்திய அணியை முன்னிலைப்படுத்தி விளையாடும் சஞ்சு சாம்சனின் குணத்தை இந்த சம்பவம் வெளிப்படையாக காட்டுகிறது. அதனைதான் இந்திய அணியும் ஒவ்வொரு வீரரிடமும் எதிர்பார்க்கிறது. எங்களின் திட்டமும் அதுதான்.
கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் விக்கெட்டை வீழ்த்துவது முக்கியம் என்பதை அறிவோம். அதனை ஸ்பின்னர்கள் செய்து காட்டியது அற்புதமாக இருந்தது. ஏற்கனவே டாஸின் போது கூறியவை தான். இந்திய வீரர்கள் எனது பணியை எளிதாக்குகிறார்கள். நான் எந்த சுமையையும் தூக்கி கொள்வதற்கான தேவையை ஏற்படுத்துவதே இல்லை. களத்திலும், களத்திற்கு வெளியிலும் எனது பணி மிகவும் எளிதாகவே இருக்கிறது.
டி20 கிரிக்கெட்டில் அச்சமின்றி விளையாடுவதால் சில நேரங்களில் ஆங்காங்கே விக்கெட்டுகளை கொடுக்க வேண்டிய நிலை வரும். ஆனால் டி20 கிரிக்கெட்டை இப்படி விளையாட வேண்டிய தேவை எழுந்துள்ளது. இப்படி விளையாடுவதன் மூலம் 17 ஓவர்களில் 200 ரன்கள் எடுக்க முடியும் என்றால், அதற்காக கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.