ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடருக்கு பின், இன்று முதல் ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு பின், கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஜொகன்னஸ்பர்க்கில் விளையாடவுள்ளது.

டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்படாத வீரர்கள், இளம் வீரர்கள் பலரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல் போட்டிக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராகும் வகையில் ஸ்ரேயாஸ் ஐயர், ஒருநாள் அணியில் இருந்து விலகி சீனியர் வீரர்களுடன் இணையவுள்ளார்.
அதேபோல் ஒருநாள் அணியில் இருந்து தீபக் சஹர் சொந்த பிரச்சனைகள் காரணமாக விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட் காய்ச்சலில் இருந்து இதுவரை குணமடையாததால், அவர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவார் என்பது சந்தேகம் தான்.
இந்திய அணியின் பிளேயிங் லெவனை பொறுத்த வரை தமிழக வீரர் சாய் சுதர்சன், ரஜத் படிதர், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் முதல் 3 இடங்களில் களமிறங்குவார்கள் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விராட் கோலியின் இடத்தில் விளையாடிய அனுபவம் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அதிகமாக உள்ளது. அதன்பின் 4வது இடத்தில் சஞ்சு சாம்சன் அல்லது திலக் வர்மா, 5வது இடத்தில் கேஎல் ராகுல் மற்றும் 6வது இடத்தில் ரிங்கு சிங் களமிறங்க வாய்ப்புகள் உள்ளது.
தொடர்ந்து அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய ஸ்பின்னர்களும், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களும் விளையாட வாய்ப்புகள் உள்ளது. டி20 தொடரில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்காத சூழலில், ஒருநாள் போட்டியில் அக்சர் படேலுக்கு பதிலாக ஏதேனும் ஒரு போட்டியில் களமிறங்க வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.