பார்ல் : சஞ்சு சாம்சன், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆடிய ஆட்டத்தால் பிசிசிஐக்கு சரியான பதிலடி கொடுத்து இருக்கிறார்.
நல்ல பேட்ஸ்மேன் என பெயர் எடுத்தும், திறமை இருந்தும் பல ஆண்டுகளாக சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வந்தது. 2023 உலகக்கோப்பை தொடரில் அவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்த்த நிலையில் அதிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், முக்கியத்துவமற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் இரண்டாம் நிலை இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட போது அதில் போனால் போகிறது என சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டாவது போட்டியில் பேட்டிங் ஆடும் வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் அதில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து இன்சைட் எட்ஜ் ஆகி ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால், அந்தப் போட்டியில் ஐந்தாம் வரிசையில் பேட்டிங் இறங்கி இருந்தார்.
இந்த நிலையில், மூன்றாவது போட்டியில் பேட்டிங் வரிசை மாற்றப்பட்டு மூன்றாம் வரிசையில் களமிறங்கினார் சஞ்சு சாம்சன். இந்த முறை ஒரு பக்கம் விக்கெட்கள், வீழ்ந்த போதும் சஞ்சு சாம்சன் நிலையாக நின்று ரன் குவித்தார். அணியின் ரன் ரேட்டை உயர்த்த தனி ஆளாக போராடினார்.
110 பந்துகளில் 100 ரன்களை தொட்டு, தன் முதல் சர்வதேச சதம் கடந்தார். பின்னர் 114 பந்துகளில் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மூன்று சிக்ஸ், ஆறு ஃபோர் அடித்து இருந்தார். அவரது இந்த ஆட்டம் மூலம் இத்தனை காலம் தனக்கு அணியில் இடம் அளிக்காமல் அலைகழித்து வந்த பிசிசிஐ-க்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
இனி வரும் ஒவ்வொரு தொடரின் போதும் சஞ்சு சாம்சனை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டிய அழுத்தம் பிசிசிஐக்கு ஏற்படும். ரசிகர்கள் சஞ்சு சாம்சன் சதத்தை கொண்டாடி வருகிறார்கள்.