ராய்ப்பூர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது ரன் கணக்கை ஒரு பிரம்மாண்ட சிக்ஸருடன் தொடங்கி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார். தனது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே கோலி இப்படிச் செய்வது இது இரண்டாவது முறை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ரோஹித் சர்மா (14) ஆட்டமிழந்த பிறகு, மைதானமே அதிரும் கரகோஷத்துடன் விராட் கோலி உள்ளே வந்தார்.

லுங்கி இங்கிடி வீசிய 6-வது ஓவரின் கடைசி பந்து வரை கோலி ரன் கணக்கைத் தொடங்கவில்லை. அந்த ஓவரின் கடைசி பந்தை இங்கிடி ஒரு ஷார்ட் பாலாக வீசினார். இதை மிக விரைவாகக் கணித்த கோலி, தனது முன்னங்காலைத் தூக்கி, ஒரு நேர்த்தியான 'புல் ஷாட்' மூலம் பந்தை பேக்வேர்ட் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார்.
வழக்கமாக நிதானமாகத் தொடங்கி, கேப்பில் தட்டிவிட்டு ரன் கணக்கைத் தொடங்கும் கோலி, இன்று முதல் ரன்னையே சிக்ஸராக மாற்றியது ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்தது.
விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் தனது ரன் கணக்கை சிக்ஸருடன் தொடங்குவது இது இரண்டாவது முறை மட்டுமே. முதல் முறையாக, 2013-ம் ஆண்டு கிங்ஸ்டனில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இதேபோல சிக்ஸர் அடித்து கணக்கைத் தொடங்கினார்.
அதன்பின், ராய்ப்பூரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 12 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தருணத்தை மீண்டும் நிகழ்த்தியுள்ளார்.
முன்னதாக, நாண்ட்ரே பர்கர் வீசிய 5-வது ஓவரில் தொடர்ந்து 3 ஃபோர் அடித்து மிரட்டிய ரோஹித் சர்மா, அதே ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். 16 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்து இருந்தது. விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களத்தில் ரன் சேர்த்து ஆடி வந்தனர்.