ஜொகன்னஸ்பர்க்: சூர்யகுமார் யாதவ் போல் அத்தனை ஷாட்களை வைத்துள்ள பேட்ஸ்மேன்களுக்கு ஃபீல்டிங்கை அமைப்பதே கடினமான ஒன்று என்று தென்னாப்பிரிக்கா அணியின் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்து அசத்தியுள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 55 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். 7 சிக்ஸ், 8 பவுண்டரி என்று மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 4வது டி20 சதத்தை பதிவு செய்தார்.

இதன் மூலமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் அதிக டி20 கிரிக்கெட் சாதனைகளை சூர்யகுமார் யாதவ் சமன் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 2 போட்டிகளிலும் சேர்த்து 156 ரன்களை விளாசியதன் காரணமாக ஆட்டநாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருது இரண்டையும் தட்டி சென்றுள்ளார் சூர்யகுமார் யாதவ்.
அதேபோல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடர் இரண்டிலும் கேப்டனாக சூர்யகுமார் யாதவின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் அட்டாக்கிங் கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று சூர்யகுமார் யாதவ் தீவிரமாக இருந்தது கண்கூடாகவே தெரிந்தது.
இந்த நிலையில் தோல்விக்கு பின் தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் பேசுகையில், சூர்யகுமார் யாதவ் கொஞ்சம் ஸ்பெஷலான வீரர் தான். மிகச்சிறந்த பேட்டிங்கை இன்று வெளிப்படுத்தினார். எங்கள் பவுலர்காள் நிச்சயம் திட்டத்திற்கேற்ப தான் பந்துவீசினார்கள். ஆனாலும் அவர் சிக்ஸ், பவுண்டரிகளை விளாசினார். அவரை போன்ற வீரர்களுக்கு ஃபீல்டிங்கை தீர்மானிப்பது கொஞ்சம் கடினமான ஒன்றுதான்.
சாதாரண ஃபீல்டிங்கை கடந்து கொஞ்சம் வித்தியாசமான ஃபீல்டை அமைக்க வேண்டும். எந்த பேட்ஸ்மேனால் ஸ்கூப் ஷாட், லேப் ஷாட், கவ் கார்னர், ஓவர் கவரில் அடிக்கும் ஷாட்களை வைத்துள்ளார்களோ, அவர்களுக்கு பவுலிங் செய்வது மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கை அமைப்பதும் கடினம்தான். நாங்கள் பேட்டிங் செய்யும் போது பிட்ச் கொஞ்சம் மாறியிருந்தது. முதல் 10 ஓவர்களில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. அதற்கேற்ப நாங்கள் விளையாடி இருக்க வேண்டும். அதுதான் தவறிவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.