மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் வரிசையில் கொஞ்சமாவது புத்திசாலித்தனத்தை காட்டி இருக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக சாடி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்திய அணி நம்பர் மூன்றாவது இடத்தில் அக்சர் பட்டேலும், எட்டாவது இடத்தில் சிவம் துபேவையும் களம் இறக்கியது.
இதற்கு பின்னால் எந்த ஒரு யுத்தியும் இல்லை என்று சாடி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்திய அணி என்ன யோசிக்கிறது என்று எனக்கு புரியவில்லை. 213 ரன்களை நீங்கள் சேஸிங் செய்ய இருக்கிறீர்கள். அப்போது பவர் பிளேவில் அதிரடி வீரர் தான் களத்திற்கு வரவேண்டும். முதல் பந்தில் இருந்து அடித்து ஆடும் வீரர் தேவை.

ஆனால் நீங்கள் அக்சர் பட்டேலை களம் இறக்கினீர்கள். அவர் 21 பந்துகளை எதிர்கொண்டு 21 ரன்கள் தான் அடித்தார். சிவம் துபே பேட்டிங் செய்ய வரும்போது வெறும் 13 பந்துகள் தான் எஞ்சி இருந்தது. சிவம் துபே பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் களமிறங்கினார். அது சரியான முடிவு கிடையாது. அங்கு அக்சர் களம் இறங்கி இருக்க வேண்டும்.
சிவம் துபே கொஞ்சம் முன்பே விளையாடி இருக்க வேண்டும். அதற்காக மூன்றாவது இடத்தில் சிவம் துபேவை களம் இறக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் எட்டாவது இடம் என்பது அவருக்கு ஏற்ற இடம் கிடையாது. தோல்விக்கு என்ன காரணம் என்று ஒன்றைத் தேர்வு செய்வது என்பது கடினமான விஷயம்.
ஏனென்றால் கடைசி மூன்று ஓவர்களில் 49 ரன்கள் இந்தியா விட்டுக் கொடுத்திருக்கிறது. 13 புல்டாஸ் பந்துகளை வீசி இருக்கிறார்கள். 16 ஒயிடு பந்துகளையும் வீசி இருக்கிறார்கள். இதனால்தான் இலக்கு 213 என்று அளவிற்கு சென்றது. எனினும் அந்த இலக்கு எட்டக்கூடிய இலக்கு தான். ஆனால் நமக்கு நல்ல அடிதளம் அமையவில்லை என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். தற்போது 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது டி20 போட்டி டிசம்பர் 14ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறுகிறது.