நியூலாண்ட்ஸ்: இந்திய டெஸ்ட் அணியின் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பிசிசிஐக்கு வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பிட்சில் பந்து கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் இருந்ததால், இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் திணறினார்கள். இருப்பினும் விராட் கோலி தனது சிறந்த டெக்னிக்கை வைத்து 46 ரன்களை விளாசி அசத்தினார். அதேபோல் ரோகித் சர்மா தனது அனுபவத்தின் மூலமாக 39 ரன்களை விளாசினார்.

தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளிலும் பேட்ஸ்மேனாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால் அவருக்கு சிறந்த டெக்னிக் இருக்க வேண்டும். அதற்கு எடுத்துக் காட்டாக புஜாரா, ரஹானே, விராட் கோலி, கேஎல் ராகுல் உள்ளிட்டோரை அடையாளப்படுத்த முடியும்.
ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் பவுன்ஸ் இருக்கும் என்றால், இங்கிலாந்தில் ஸ்விங் இருக்கும். அதேபோல் தென்னாப்பிரிக்காவில் பேஸ் மற்றும் பவுன்ஸ் இருக்கும். இந்த மைதானங்களில் எந்தவித டெக்னிக்கும் இல்லாமல் களமிறங்கினால் அவரால் 10 ரன்களை தாண்டுவதே எளிதாக இருக்காது. அப்படித்தான் இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கியுள்ளார்.
இந்திய மண்ணில் ஸ்பின்னர்களை வெளுத்து கட்டிவிட்டு, தென்னாப்பிரிக்கா சென்ற அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 3 இன்னிங்ஸ்களில் சேர்த்து 37 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். வெளிநாடுகளில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரஹானேவை புறந்தள்ளிவிட்டு ஸ்ரேயாஸ் ஐயரை அழைத்து வந்தது இந்திய அணி நிர்வாகம்.
ஆனால் அந்த நம்பிக்கைக்கு அருகில் வரக் கூடிய அளவிற்கு கூட ஸ்ரேயாஸ் ஐயரால் பேட்டிங் செய்ய முடியவில்லை. இதனால் மிடில் ஆர்டரில் ருதுராஜ் கெய்க்வாட்டை முயற்சி செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். 5வது இடத்தில் களமிறங்கும் வீரர்கள் ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் புதிய பந்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும்.
அதன்படி பார்த்தால் ருதுராஜ் கெய்க்வாட் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே இதுவரை அதிகமாக திணறியுள்ளார். மற்றபடி எந்த வேகத்தில் வந்தாலும் அவரால் ரஹானேவுக்கு இணையாக சிறந்த கிரிக்கெட்டை விளையாட முடியும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த டெஸ்ட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டை களமிறக்கி வாய்ப்பளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.