செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்த நிலையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு மட்டும் சிறப்பு பயிற்சி அளித்து இருக்கிறார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற உள்ளது. இதுவரை இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை.

இந்த நிலையில், இந்த முறை டெஸ்ட் அணியின் முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அஜின்க்யா ரஹானே, புஜாரா அணியில் இருந்தே நீக்கப்பட்டு இருக்கின்றனர். டெஸ்ட் போட்டியை தனி ஆளாக மாற்றும் வல்லமை கொண்ட ரிஷப் பண்ட் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக குணமாகவில்லை.
இந்த நிலையில், ரோஹித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல் போன்ற அனுபவம் கொண்ட வீரர்களோடு, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற டெஸ்ட் போட்டி அனுபவம் குறைவாக உள்ள வீரர்கள் பேட்டிங் செய்ய உள்ளனர்.
அதில் ஸ்ரேயாஸ் ஐயர் நிலை தான் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. அவர் இது வரை இந்திய மண்ணில் ஏழு டெஸ்ட் போட்டிகளில் ஆடி 430 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்தில் ஒரே ஒரு வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் ஆடி சொதப்பி இருந்தார். அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி 39 மட்டுமே.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். பிட்ச்சில் பவுன்ஸ் அதிகம் இருக்கும். ஸ்ரேயாஸ் ஐயருக்கு, ஷார்ட் பிட்ச் செய்யப்பட்டு, பவுன்ஸ் ஆகும் பந்துகளை எதிர்கொள்வதில் சிக்கல் உள்ளது. ஷார்ட் பிட்ச் பந்துகளை அவர் அடித்து ஆட ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்து வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், செஞ்சுரியனில் நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடந்த வலைப் பயிற்சியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு மட்டும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அவரை பேட்டிங் பயிற்சி செய்ய அழைத்த பயிற்சியாளர் டிராவிட், அவருக்கு 18 கஜ தூரத்தில் இருந்து பந்தை வீசச் செய்து பயிற்சி செய்ய வைத்தார். பொதுவாக பிட்ச்சில் இரண்டு கிரீஸ் இடையே 22 கஜ தூரம் இருக்கும்.
ஆனால், தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்கள் உயரமாக இருப்பதால் அதிக உயரத்தில் இருந்து பந்தி வரும். அப்படி வரும் பந்துகள் அதிகமாக ஷார்ட் பிட்ச் ஆகும், மேலும், பவுன்ஸ் அதிகமாக இருக்கும். அந்த பந்துகளை சமாளிக்க வேண்டும் என்பதால் 18 கஜ தூரத்தில் இருந்து பந்து வீச வைத்து ஸ்ரேயாஸ் ஐயருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.