கொல்கத்தா: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கில் முதல் இன்னிங்ஸில் வெறும் 3 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டதன் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார். இது போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியது.
இதனால் மற்ற வீரர்கள் அனைவரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 30 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. இந்த நிலையில் சாதாரண ஒரு சுளுக்கு தான் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்லை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவ குழுவினர் அழைத்து சென்றிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் கொல்கத்தாவில் உள்ள பிரபல உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் கில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருடைய உடல்நலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. அவருடைய உடல்நலம் எவ்வாறு இருக்கிறது. ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா? முன்னேற்றம் அடைந்துள்ளதா என்பதை பார்த்துதான் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்பது தெரியவரும் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.
இதனிடையே ஏற்கனவே டெஸ்ட் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடி வரும் கில்லை டி20 அணியிலும் தேவையில்லாமல் தேர்வு செய்து ஓய்வு கொடுக்காமல் அவரை விளையாட வைப்பதன் காரணமாக தான் இந்த நிலை ஏற்பட்டு இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சுப்மன் கில் கடந்த ஒரு ஆண்டாக டி20 கிரிக்கெட்டில் சேர்க்கப்படாத நிலையில் தேவையில்லாமல் அவர் அணிக்குள் வந்ததாகவும் தற்போது ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆஸ்திரேலிய தொடர் என்று அவருக்கு ஓய்வே இல்லை என்றும் ரசிகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல், பணிச்சுமை காரணமாக அவருக்கு சுளுக்கு ஏற்படவில்லை என்றும் சரியான தூக்கம் இன்றி இருந்ததால் தான் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார். கழுத்தில் இறுக்கமான உணர்வு அவருக்கு இருந்ததாகவும், இதற்கும் அவருடைய பனிச்சுமைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கில் ஃபிட்டான வீரர் என்றும் அவர் தன்னுடைய உடல் நலத்தை பேணி காத்து வருவதாகவும் மோர்க்கல் குறிப்பிட்டார். காலையில் எழுந்த உடனே அவருக்கு கழுத்தில் சுளுக்கு இருந்ததாகவும் அதை மீறி தான் அவர் களத்தில் விளையாடியதாகவும் மோர்க்கல் விளக்கம் அளித்துள்ளார்.
ஏற்கனவே ஸ்ரேயாஸ் சாதாரணமாக கீழே விழுந்து பெரும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது கில்லும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களை கலக்கமடைய வைத்திருக்கிறது.