கவுஹாத்தி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வாழ்வா-சாவா போராட்டமாக மாறியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது, ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ள இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 4-ம் பேட்டிங் வரிசையில் யாரைக் களமிறக்குவது என்ற பெரும் குழப்பத்தில் இந்திய அணி நிர்வாகம் சிக்கி உள்ளது.
வரலாற்றிலேயே முதல் முறையாகக் கவுஹாத்தியில் உள்ள பர்சபாரா மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் போட்டியில் இந்தியக் கேப்டன் சுப்மன் கில் பங்கேற்பது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் வெறும் 3 பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில், 4 ரன்களில் கழுத்து வலி காரணமாக அவர் 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்மன் கில்லுக்குக் கடுமையான கழுத்து வலி இருப்பதால், சில நாட்கள் முழு ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதன் காரணமாக, அவர் கவுஹாத்திக்கு மற்ற அணி வீரர்களுடன் பயணம் செய்ய மாட்டார் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. ஒருவேளை சுப்மன் கில் கவுஹாத்திக்கு பயணம் செய்தாலும் போட்டியில் ஆடுவது சந்தேகம் தான்.
"அவருக்குக் கழுத்தில் கடுமையான வலி உள்ளது. காயத்தின் தன்மை குறித்து மேலும் விவரங்களை வெளியிட இயலாது. அவர் கழுத்துப் பட்டையை (Neck Collar) தொடர்ந்து அணிய வேண்டும்," என்று இந்திய அணி வட்டாரம் தெரிவித்துள்ளது. "அவருக்கு மூன்று முதல் நான்கு நாட்கள் வரை ஓய்வெடுக்கவும், விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை நாங்கள் தினமும் கண்காணித்து வருகிறோம். செவ்வாய்க்கிழமைக்குள் ஒரு தெளிவான முடிவு தெரியவரும்" என்றும் கூறப்பட்டுள்ளது.
கேப்டன் கில் இல்லாத நிலையில், அவருக்குப் பதிலாகக் களமிறங்க இந்திய அணியில் தற்போது இரண்டு பேட்ஸ்மேன்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் இடது கை ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன் மற்றும் தேவ்தத் படிக்கல்.
டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் நீண்ட காலத்திற்கான 3-ம் வரிசை வீரராகக் கருதப்பட்டவர் சாய் சுதர்சன். கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டெல்லியில் நடந்த டெஸ்டில் 87 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தாலும், தென் ஆப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது, அணி நிர்வாகத்திற்கு அவர் மீது முழு நம்பிக்கையைத் தரவில்லை.
கடந்த மார்ச் 2024-ல் இங்கிலாந்துக்கு எதிராகத் தனது இரண்டாவது டெஸ்டில் விளையாடிய படிக்கல்லும், தென் ஆப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான தொடரில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இருப்பினும், கடந்த மாதம் ரஞ்சி டிராபியில் கர்நாடகாவுக்காக 96 ரன்களும், செப்டம்பரில் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிராக 150 ரன்களும் குவித்தது அவருக்குச் சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த இருவரில் ஒருவரைத் தேர்வு செய்தால், இந்திய அணியில் ஆடும் லெவனில் உள்ள வீரர்களில் ஏழு பேர் இடது கை பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள். கொல்கத்தா டெஸ்டில் தென் ஆப்பிரிக்கச் சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர், தனது 8 விக்கெட்டுகளில் 6 விக்கெட்டுகளை இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவே வீழ்த்தினார். இந்தச் சூழலில், மீண்டும் அதிக இடது கை வீரர்களுடன் களமிறங்குவது எதிரணிக்குச் சாதகமாக அமையக்கூடும்.
துருவ் ஜுரெல்: கொல்கத்தா டெஸ்டின் இறுதி இன்னிங்ஸில், வலது கை பேட்ஸ்மேனான துருவ் ஜுரெல் 4-ம் வரிசையில் களமிறக்கப்பட்டார். அதே திட்டத்தை கவுஹாத்தியிலும் செயல்படுத்தி, ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியை அணியில் சேர்க்கும் வாய்ப்பு உள்ளது.
வெளியிலிருந்து புதிய வீரர்: கில்லுக்குப் பதிலாக அணியில் இல்லாத ஒரு வீரரை அழைப்பதே சிறந்த தீர்வாக இருக்கலாம். அந்த வகையில் சமீபத்திய முதல் தரப் போட்டிகளில் இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடித்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரஞ்சி தொடரில் தொடர்ந்து ரன் குவித்து வரும் கருண் நாயர்ஆகியோர் பரிசீலனையில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரை தொடரைச் சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ள நிலையில், கேப்டனின் காயம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், கீழ்க்கண்ட 4-ம் வரிசைக்கு அணி நிர்வாகம் யாரை நம்பிக் களமிறக்கப் போகிறது என்பதை கிரிக்கெட் உலகம் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.