கேபெர்ஹா : கடந்த ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணியின் இரண்டு துவக்க வீரர்களும் டக் அவுட் ஆகி இருக்கிறார்கள். போட்டி துவங்கும் முன்பே துவக்க வீரர்கள் குறித்து விமர்சனம் செய்த ரசிகர்கள், இந்த மோசமான செயல்பாட்டை அடுத்து இந்திய அணி வீரர்கள் சுப்மன் கில் - ஜெய்ஸ்வாலை வறுத்து எடுத்து வருகின்றனர்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் படுமோசமான சாதனையை செய்து இருக்கிறார்கள். இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் - யாஷஸ்வி ஜெய்ஸ்வால் துவக்கம் அளித்தனர்.
கடந்த ஆஸ்திரேலிய டி20 தொடரில் களமிறங்கிய துவக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் - யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடியில் ருதுராஜை நீக்கி விட்டு சுப்மன் கில் - ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கிய போதே விமர்சனம் எழுந்தது. ருதுராஜ் கெய்க்வாட் உடல்நிலை சரியில்லாததால் நீக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்த சில ரசிகர்கள் அவரை வேண்டுமென்றே நீக்கி விட்டதாக விமர்சனத்தை முன் வைத்தனர்.

டாஸ் போடப்பட்டு அணி அறிவிக்கப்பட்ட உடன் இந்த விமர்சனம் சமூக ஊடகங்களில் ஆரம்பித்தது. அந்த விமர்சனம் முடிவதற்குள் துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் டக் அவுட் ஆகி ஆட்டமிழந்தனர். அதனால் மேலும் விமர்சனம் எழுந்தது.
ஜெய்ஸ்வால் முதல் பந்தில் இருந்தே அதிரடி ஆட்டம் ஆட வேண்டும் என்றே அணியில் தேர்வு செய்யப்பட்டவர். அவர் டக் அவுட் ஆனதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அவருக்கு துணையாக வரும் மற்றொரு துவக்க வீரர் பொறுப்பாக ஆட வேண்டும் என்பதே அணியின் திட்டம். ஆஸ்திரேலிய டி20 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் அந்த பணியை தான் செய்து இருந்தார். ஆனால், சுப்மன் கில் அதை செய்யத் தவறி தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆனார்.
கடந்த 2016 ஆசிய கோப்பை டி20 தொடரில் அப்போது துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, அஜின்க்யா ரஹானே டக் அவுட் ஆகி இருந்தார்கள். அதன் பின் ஏழு ஆண்டுகள் கழித்து சர்வதேச டி20 ஒன்றில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் டக் அவுட் ஆகி இருக்கிறார்கள்.
இந்தப் போட்டியில் துவக்கக் வீரர்கள் டக் அவுட் ஆனாலும் ரிங்கு சிங் 68*, சூர்யகுமார் யாதவ் 56 ரன்கள் குவித்ததால் இந்திய அணி 180 ரன்கள் சேர்த்தது. எனினும், அதிரடி ஆட்டத்தில் கலக்கிய தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.