டர்பன் : இந்திய அணியில் ரிங்கு சிங் முக்கிய வீரராக மாறி வரும் நிலையில், அவரது வலுவான உடற்கட்டு குறித்து ரசிகர்கள் பலரும் பேசி வருகின்றனர்.
ரிங்கு சிங் அதிக சிக்ஸர்களை எளிதாக அடிக்க காரணம் அவரது பலம் தான். ரிங்கு சிங் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், ரிங்கு சிங் ஏன் "பாடி பில்டர்" ஆக மாறினார் என்பது குறித்து சக வீரரான சுப்மன் கில் வேடிக்கையான உண்மை ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
ரிங்கு ஆசிய விளையாட்டுத் தொடரில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்று சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்தி இருந்தார்.

தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் இடம் பெற்று இருக்கிறார். இந்த தொடரில் ஆடும் முன் தான் எவ்வாறு தென்னாப்பிரிக்க சூழ்நிலைக்கு தயார் ஆகி வருகிறேன் என ரிங்கு சிங் பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் பகிர்ந்து இருந்தார்.
அப்போது ஒரு கட்டத்தில் தனது உடற்பயிற்சி பற்றியும், அதனால் தன்னால் மிக வேகமாக ஓட முடிகிறது எனவும் ரிங்கு சிங் கூறிக் கொண்டு இருந்தார். அப்போது பின்னே நின்று இருந்த சுப்மன் கில், "ரிங்கு சிங்கை குரங்கு கடித்ததில் இருந்து தான் அவர் இப்படி வேகமாக ஓடத் துவங்கி இருக்கிறார்" என வேடிக்கையாக கூறினார்.
அப்போது ரிங் சிங் தன் கையில் குரங்கு கடித்த இடத்தை காண்பித்தார். ரிங்கு சிங் தான் ஒரு அனுமான் பக்தர் எனவும் முன்பு கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. ரிங்கு சிங் கடுமையான உடற்பயிற்சிகளை செய்வதால் தான் அதிக சிக்ஸர்களை பறக்க விடுகிறார். அத்தோடு சர்வதேச கிரிக்கெட்டில் ஆடும் போது நல்ல உடற்தகுதி இருந்தால் தான் அணியில் நீண்ட காலம் இருக்க முடியும். அதை மனதில் வைத்தே அவர் இந்த விஷயத்தில் தீவிரமாக இருப்பதாக கூறினார்.