கட்டாக்: இந்தியா, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று கட்டாக்கில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மூன்று வார ஓய்வுக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர வீரரும் டி20 துணை கேப்டனுமான கில் அணிக்கு திரும்பிருக்கின்றார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று அவருக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டது. இதனால் அவர் கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இரண்டாவது டெஸ்ட்க்கு அவர் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இரண்டு வாரம் அவர் ஓய்வில் இருந்தார். முதல் டெஸ்ட் போட்டியின் போது கொல்கத்தா மருத்துவமனையில் இரண்டு நாள் அவர் தங்கி இருந்தார். இதனால் கில்லுக்கு என்ன ஆனது என்ற ரகசியம் இன்று வரை வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் முதல் டி20 போட்டிக்கு முன்பு கிரிக்கெட் வர்ணனையாளர்களிடம் பேசிய கில், தமக்கு வெறும் சுளுக்கு மட்டும் ஏற்படவில்லை என்ற ரகசியத்தை போட்டு உடைத்தார்.
இது குறித்து பேசிய அவர், தற்போது நான் நலமுடன் இருக்கிறேன். என்னுடைய உடலும் சிறப்பான முறையில் இருக்கின்றது. பிசிசிஐ சிறப்பு மையத்தில் நான் சில நாட்கள் தங்கி இருந்தேன். மனதளவிலும், உடலளவிலும் தயாராக இருக்கின்றேன். உண்மையில் எனக்கு கழுத்துப் பகுதியில் டிஸ்க்கில் வீக்கம் ஏற்பட்டிருந்தது. அந்த வீக்கமானது அங்குள்ள நரம்புகளை அழுத்தத் தொடங்கியது.
இதனால் நான் பேட்டிங் செய்ய சென்றபோது, எனக்கு கடுமையான வலி ஏற்பட்டது. அன்றைய நாள் தொடங்குவதற்கு முன்பே எனக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டு இருந்தது. எனவே நரம்பும் சேர்ந்து அழுத்த தொடங்கியதால் என்னால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. இதனை அடுத்து நான் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அங்கு சிகிச்சைக்கு பிறகு தற்போது நான் காயத்திலிருந்து மீண்டு வந்து விட்டேன் என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார். டி20 போட்டியில் தொடக்க வீரராக சுப்மன் கில் தடுமாறி வருவதாக விமர்சனம் எழுந்த நிலையில், தற்போது பேட்டிங்கில் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் தள்ளப்பட்டு இருக்கிறார்.