கட்டாக்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றிருந்தாலும், அந்த வெற்றிக்கு இடையே ஒரு முக்கியமான பிரச்சனை மறைக்கப்பட்டுள்ளது. அது இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில்.
அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ளது. அதில் இந்தியா கோப்பை வெல்ல வேண்டும் என்றால் சுப்மன் கில் என்கிற 'சோதனை முயற்சியை' இந்தியா இப்போதே கைவிட வேண்டும் என்ற குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.
கட்டாக்கில் நடந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணியைக் காப்பாற்றினர். ஆனால், டாப் ஆர்டர் பேட்டிங்கில் தடுமாற்றம் நிலவுவது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தப் போட்டியில் 175 ரன்கள் என்ற ஸ்கோரை தற்காத்து ஆடிய இந்தியா எளிதாக வென்றது. ஆனால், போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்தியா 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சுப்மன் கில் 4 ரன்கள், சூர்யகுமார் 12 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா, பவர்-பிளேயில் அதிரடி காட்டுவதற்குப் பதிலாக, விக்கெட் விழுந்ததால் அணியை மீட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனால் அவரது இயல்பான ஆட்டம் பாதிக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா மட்டும் கடைசியில் அதிரடி காட்டவில்லை என்றால், இந்தியா 175 ரன்களை எட்டியிருக்காது.
ஆசிய கோப்பைத் தொடரிலிருந்து சுப்மன் கில் டி20 அணிக்குத் திரும்பியதில் இருந்தே, இந்திய அணியின் அதிரடி வேகம் குறைந்துவிட்டது என்பது புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை.
சுப்மன் கில் வருவதற்கு முன், அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் கூட்டணி ஓப்பனிங் இறங்கிய 12 போட்டிகளில், இந்திய அணி 6 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்தது. அபிஷேக் சர்மா - சுப்மன் கில் கூட்டணி வந்த பிறகு, கடந்த 13 போட்டிகளில் இந்திய அணி ஒரே ஒரு முறை மட்டுமே 200 ரன்களைத் தாண்டியுள்ளது.
சுப்மன் கில் வந்தால் அணிக்கு 'நிலைத்தன்மை' கிடைக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், இந்தியாவின் 'அதிரடி' காணாமல் போய்விட்டது. கடந்த ஓராண்டில் மட்டும் டி20 கிரிக்கெட்டில் 3 சதங்களை விளாசியவர் சஞ்சு சாம்சன். ஆனால், சுப்மன் கில்லுக்கு 'துணை கேப்டன்' என்ற பதவி இருப்பதால், ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சன் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளார்.
அடுத்த டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு மாற்று வீரராகக் கூட இடம் கிடைக்காது எனவும் ஒரு பேச்சு நிலவுகிறது. இது இந்திய அணி அரசியலாக இருக்கலாம். ஆனால் இது நல்ல கிரிக்கெட் அல்ல. கவுதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்திய அணியை 250-280 ரன்கள் அடிக்கக்கூடிய அதிரடி அணியாக மாற்ற நினைக்கிறார்கள். ஆனால், சுப்மன் கில்லின் ஆட்டமுறை அந்தத் திட்டத்திற்கு வேகத்தடையாக உள்ளது.
2022 உலகக்கோப்பையில் இந்தியா தோற்றதற்கு முக்கிய காரணமே, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மந்தமான ஆட்டம் தான். அதன் பிறகு பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் சர்மா அணியின் அணுகுமுறையை அதிரடியாக மாற்றினார். ஆனால் இப்போது சுப்மன் கில்லை கட்டாயப்படுத்தி அணியில் திணிப்பது, மீண்டும் அந்தப் பழைய தற்காப்பு ஆட்டத்திற்கு செல்வது போல உள்ளது.
சுப்மன் கில் ஒரு மிகச்சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர் இந்தியாவின் வருங்கால கேப்டனும் கூட. ஆனால், இந்த டி20 உலகக்கோப்பையைப் பொறுத்தவரை, அந்த இடம் சஞ்சு சாம்சனுக்கே பொருத்தமானது.
பெயருக்காகவும், பதவிக்காகவும் ஒரு வீரரை அணியில் வைத்திருப்பதை விட, அணியின் தேவைக்காகச் சரியான வீரரைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனம். இல்லையெனில், உலகக்கோப்பை கனவு பகல் கனவாகவே போய்விடும்.