மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனும் தொடக்க வீரருமான சுப்மன் கில் வெறும் நான்கு ரன்களில் ஆட்டம் இழந்தார். டி20 கிரிக்கெட்டில் கில் கடுமையாக பேட்டிங்கில் தடுமாறி வருகிறார்.
இன்னும் சொல்லப்போனால் நடப்பாண்டில் ஒருமுறை கூட அரை சதம் அடிக்கவில்லை. இந்த ஆண்டு அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோரே 47 தான். இதனால் கில் அணியை விட்டு நீக்கப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான இர்பான் பதான், கில்லுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், தற்போது டி20 அணியில் இருக்கும் மிகப்பெரிய கேள்வியே கில்லின் பணி என்னவென்று நிர்ணயிப்பது தான். அபிஷேக் ஷர்மா விளையாடும் விதத்தைப் பார்த்து, கில் நாமும் அதே போல் அதிரடி காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்.
முதல் பந்திலே பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் அதிரடி காட்ட முற்பட்டு கேட்ச் ஆனார். அது வெறும் முதல் ஓவர் தான். இப்படி முதல் பந்துகளில் இருந்தே அதிரடி காட்டுவது ஒன்றும் கில்லின் இயல்பான ஆட்டம் கிடையாது. வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இறங்கி வந்து அடித்து கில் ஆட்டம் இழந்தது கிடையாது.
இதுதான் முதல் முறை என்று நினைக்கின்றேன். இதன் மூலம் அவருடைய மனநிலை எப்படி இருக்கிறது என்று தெளிவாகிறது. சஞ்சு சாம்சன் அல்லது அபிஷேக் ஷர்மா மாதிரி தம் விளையாட வேண்டும் என்று நினைப்பதை முதலில் நிறுத்த வேண்டும். கில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதும்.
பந்தை சரியாக டைமிங் செய்து உங்களுடைய ஆட்டத்தை நீங்கள் விளையாடுங்கள். ரிஸ்க் எடுத்து ரன்கள் சேர்க்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். ரிஸ்க் இன்றி முதலில் ரன்கள் சேர்க்க வேண்டும். ஆடுகளத்தை முதலில் ஆராய்ந்து விட்டு போட்டியின் சூழலுக்கு ஏற்ப அதன் பிறகு ரன்கள் சேர்க்க வேண்டும்.
கில்லின் ஸ்ட்ரைக் ரேட் தற்போது 140 என்ற அளவில் இருக்கின்றது. ஆனால் அவருடைய சராசரி மிகவும் குறைவாக இருக்கிறது. வித்தியாசமாக விளையாட வேண்டும் என்பதை முதலில் அவர் கைவிட வேண்டும். அவர் இந்திய டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியின் கேப்டன். கிரீஸ் விட்டு இறங்கி ஆடுவதை நிறுத்த வேண்டும்.
சஞ்சு சாம்சன் மாதிரி எனக்கும் ஆட தெரியும் என்று அவர் மற்றவருக்கு சொல்ல நினைக்கின்றார். அதை கைவிட்டு தன்னுடைய சொந்த பலத்தை வைத்து விளையாடுங்கள். உங்களைப் போல் நீங்கள் விளையாடுங்கள். மற்றவர்களை காப்பியடிக்காதீர்கள் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.