கட்டாக்: தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் சுப்மன் கில் இந்திய அணியில் தனக்கான இடத்தை பலப்படுத்திக் கொள்ள 5 வாய்ப்புகள் கிடைக்க போவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். சுப்மன் கில்லுக்காக சஞ்சு சாம்சன் இடம், இந்திய அணியால் அதிரடியாக பறிக்கப்பட்ட நிலையில், கில் அந்த இடத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் 2025-ல் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி நாளை செவ்வாய்க்கிழமை அன்று கட்டாக்கில் நடைபெறும். உடல் தகுதிபெற்ற கில், தொடரின் முதல் போட்டியில் பங்கேற்க அனுமதி பெற்றுள்ளார்.

இது குறித்து பேசிய இர்பான் பதான், "முதலில், சுப்மன் டி20 கிரிக்கெட்டில் தனது இடத்தைப் பலப்படுத்த வேண்டும். அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறார். ஐபிஎல் தொடரில் அவரது திறனைக் கண்டோம். இங்கு அவருக்கு வாய்ப்பு உள்ளது."
"சிறிது அழுத்தம் இருக்கும், ஆனால் கில் சிறந்த வீரர். இத்தொடரில் அவர் சிறப்பாகச் செயல்படுவார் என நம்புகிறேன். காயத்திலிருந்து மீண்ட அவருக்கு, தரம்சலா போன்ற வேகம், பவுன்ஸ் கொண்ட பிட்ச்களில் வாய்ப்புகள் கிடைக்கும்" என்று பதான் கூறினார்.
சுப்மன் கில் 33 டி20 சர்வதேச போட்டிகளில் 837 ரன்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 169 இன்னிங்ஸ்களில் 5,380 ரன்கள் குவித்துள்ளார்.இதே போன்று ஜஸ்பிரித் பும்ரா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இத்தொடரில் இந்தியப் பந்துவீச்சுத் தாக்குதலை வழிநடத்துவார்.
இது குறித்து பேசிய பதான், "இரண்டாவதாக, பும்ராவுடன் பந்துவீசும் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாட்டை நான் பார்க்க விரும்புகிறேன். ஹர்திக் பாண்டியாவுடன் அர்ஷ்தீப் சிங் போன்றோர் களமிறங்கலாம். உலகக் கோப்பைக்கு இவர்களின் செயல்பாடு முக்கியம். "
"மூன்றாவதாக, ஹர்திக் பாண்டியாவுடன் ஃபினிஷர் பங்கை யார் எப்படிச் செய்கிறார்கள் என்பதை நான் பார்க்க விரும்புகிறேன்.உலகக் கோப்பையை தக்க வைத்து கொள்ள கீழ்வரிசை பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இருப்பது மிக முக்கியம். ஹர்திக்குடன் ஆட்டத்தை முடிக்கும் மற்றொரு பேட்ஸ்மேன் மீதுதான் என் கவனம் இருக்கும்," என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.
அக்சர் படேல், சிவம் தூபே, ஜிதேஷ் ஷர்மா ஆகியோர் ஹர்திக் பாண்டியாவுடன் ஃபினிஷர் பங்கை ஏற்க வாய்ப்புள்ளது. ஜிதேஷ் ஷர்மாவை விக்கெட் கீப்பராக அணி நிர்வாகம் தக்கவைக்குமா அல்லது சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்குமா என்பது பார்க்க வேண்டியுள்ளது.