கவுஹாத்தி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் கேப்டன் சுப்மன் கில் பங்கேற்பது பெரும் சந்தேகத்தில் உள்ள நிலையில், இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி மீண்டும் இந்திய அணியுடன் இணையுமாறு அவசரமாக அழைக்கப்பட்டுள்ளார். இந்தத் திடீர் அழைப்பு, கவுஹாத்தி டெஸ்டில் இந்திய அணியின் ஆடும் லெவனில் மாற்றங்கள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதே சமயம், சுப்மன் கில் இல்லாமல் போனால் மற்றொரு சிக்கலும் உள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான நிதிஷ் குமார் ரெட்டி, முன்னதாக டெஸ்ட் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, தென் ஆப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான இந்தியா 'ஏ' ஒருநாள் தொடரில் பங்கேற்க அனுப்பப்பட்டார். இந்நிலையில், கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது கேப்டன் சுப்மன் கில்லுக்குக் கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக, நிதிஷ் ரெட்டி அவசரமாக மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நிதிஷ் குமார் ரெட்டி செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் விருப்பப் பயிற்சி முகாமில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இரண்டாவது டெஸ்டுக்கு முன்பு அவர் அணியில் இணைவார் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. ஆனால், கில்லின் காயம் மற்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழல் காரணமாக, ஒரு மாற்று வீரராக நிதிஷ் ரெட்டி முன்கூட்டியே அழைக்கப்பட்டுள்ளார். ஒருவேளை கில் முழு உடற்தகுதியுடன் இல்லையென்றால், கவுஹாத்தி டெஸ்டில் ஆடும் லெவனில் நிதிஷ் ரெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.
முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், வெறும் 3 பந்துகளைச் சந்தித்த நிலையில், 'ஸ்வீப் ஷாட்' அடிக்க முயன்றபோது சுப்மன் கில்லின் கழுத்தில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த அவர், 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆகி பெவிலியன் திரும்பினார். பின்னர், போட்டியிலிருந்து முழுமையாக விலகிய அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றார்.
திங்கட்கிழமை வெளியான தகவல்களின்படி, கில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அவர் புதன்கிழமை அணி வீரர்களுடன் கவுஹாத்திக்குப் பயணம் செய்வார் என்று தெரிகிறது. பிசிசிஐ மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மோசமான நிலையில், அவர் வியாழக்கிழமை பயணம் செய்யக்கூடும். தற்போதைய நிலவரப்படி, அவர் இரண்டாவது டெஸ்டில் விளையாட 50-50 வாய்ப்புகளே உள்ளதாகக் கூறப்படுகிறது.
முதல் போட்டியில் அடைந்த படுதோல்விக்குப் பிறகு, தொடரைச் சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்தச் சூழலில், கேப்டனும், முக்கிய பேட்ஸ்மேனுமான கில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், அது அணிக்குப் பெரும் பின்னடைவாக அமையும்.
நிதிஷ் ரெட்டி ஒரு ஆல்-ரவுண்டராக இருப்பது அணிக்குக் கூடுதல் பலம் என்றாலும், அவர் கில் ஆடும் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ததில்லை. எனவே, இந்திய அணி பேட்டிங் வரிசையில் மாற்றங்களைசெய்ய வேண்டிய நிலையில் உள்ளது. இது போட்டியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், நிதிஷ் குமார் ரெட்டி.