மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஒன்பதாம் தேதி முதல் தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட அணி களமிறங்கியுள்ளது. இதில் காயமடைந்த சுப்மன் கில் பெயரும் இடம் பெற்றிருந்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது கில் கழுத்து சுளுக்கு காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார்.

அதன் பிறகு கில் எந்த வித போட்டியிலும் பங்கேற்கவில்லை. தற்போது பெங்களூரில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் தங்கி உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த தருணத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அணியில் உடல் தகுதி நிரூபித்தால் மட்டுமே பங்கேற்பார் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.
இந்த சூழலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கவுதம் கம்பீர், சுப்மன் கில் முழு உடல் தகுதியை எட்டி விட்டார். அதனால் தான் அவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த சில போட்டிகளில் அவர் விளையாடாததால், மீண்டும் ரன் குவிக்க வேண்டும் என்ற பசியில் இருக்கிறார் என்று கம்பீர் தெரிவித்தார்.
தற்போது கில், டி20 அணியில் திரும்பி இருப்பதால் அவர் தொடக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் களம் இறங்குவார். இதன் மூலம் சஞ்சு சாம்சனுக்கு நடுவரிசையில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் ஒன்பதாம் தேதி கட்டாக்கில் முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. டிசம்பர் 11ஆம் தேதி சந்திகாரியிலும், டிசம்பர் 14ஆம் தேதி தர்மசாலாவிலும், டிசம்பர் 17ஆம் தேதி லக்னோவிலும், டிசம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்திலும் டி20 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.