கவுகாத்தி: கவுகாத்தி டெஸ்ட் போட்டியை எப்படியாவது 'டிரா' செய்துவிடலாம் என்ற இந்திய ரசிகர்களின் கடைசி நம்பிக்கையையும், தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர் தனது ஒரே ஓவரில் சிதைத்துவிட்டார். 5-ம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, 3 பந்துகள் இடைவெளியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவின் தோல்வியை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டார்.
549 ரன்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்தி வந்த இந்திய அணி, நான்காம் நாள் ஆட்ட முடிவிலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் (13) மற்றும் கே.எல். ராகுல் (6) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து 27/2 என்ற நிலையில் தடுமாறியது. இதனால், 5-ம் நாள் முழுவதும் பேட்டிங் செய்து போட்டியை டிரா செய்வதே இந்திய அணியின் ஒரே இலக்காக இருந்தது.

ஐந்தாம் நாள் ஆட்டத்தை சாய் சுதர்சன் மற்றும் 'நைட்வாட்ச்மேன்' குல்தீப் யாதவ் ஆகியோர் தொடங்கினர். இருவரும் முதல் சில ஓவர்களை நிதானமாக எதிர்கொண்டனர். ரசிகர்கள் மத்தியில் டிரா செய்துவிடலாம் என்ற நம்பிக்கை லேசாகத் துளிர்விடத் தொடங்கியது.
ஆனால், 24-வது ஓவரை வீச வந்த சைமன் ஹார்மர், இந்தியாவின் மொத்த திட்டத்தையும் தவிடுபொடியாக்கினார். அந்த ஓவரின் 3-வது பந்தில், குல்தீப் யாதவ் பந்து திரும்பும் என்று கணித்து ஆட, பந்து நேராக வந்து மிடில் ஸ்டம்பை பதம் பார்த்தது. 38 பந்துகள் போராடிய குல்தீப் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதே ஓவரின் கடைசிப் பந்தில், புதிதாக களமிறங்கிய துருவ் ஜூரல், பந்தை தற்காக்க முயன்று, ஸ்லிப்பில் நின்ற மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்து வெறும் 2 ரன்களில் வெளியேறினார். ஒரே ஓவரில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் பேட்டிங்கை உடைத்தார் ஹார்மர். 40 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் இருந்த இந்தியா, அந்த ஓவர் முடிவில் 42 ரன்களுக்கு 4 விக்கெட் எனச் சரிந்து அதல பாதாளத்தில் விழுந்தது.
ஒருபுறம் ஆமை வேகத்தில் ஆடி வரும் சாய் சுதர்சன், மறுமுனையில் கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோர் களத்தில் உள்ளனர். இன்னும் 506 ரன்கள் தேவை என்ற நிலையில், கைவசம் 6 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. 5-ம் நாள் பிட்ச்சில் பந்து நன்றாகத் திரும்பும் என்பதால், இந்திய பேட்ஸ்மேன்கள் நாள் முழுவதும் தாக்குப்பிடித்து போட்டியை டிரா செய்வது என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்று.
நேற்றே துவக்க வீரர்கள் பொறுப்பற்று ஆட்டமிழந்தது, இன்று ஹார்மரின் சுழல் என இந்திய அணி சொந்த மண்ணில் 0-2 என்ற கணக்கில் 'ஒயிட்வாஷ்' ஆகும் விளிம்பில் நிற்கிறது. கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் மீதமுள்ள பேட்ஸ்மேன்கள் ஏதேனும் அற்புதம் நிகழ்த்தினால் மட்டுமே, இந்த படுதோல்வியில் இருந்தும், தொடர் ஒயிட்வாஷ் அவமானத்தில் இருந்தும் இந்தியா தப்பிக்க முடியும்.