மும்பை: ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தனது உடல் தகுதியை நிரூபித்த பிறகும் இந்திய அணியில் முகமது ஷமி சேர்க்கப்படாதது ஏன் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குபின் ஷமி காயம் காரணமாக இந்திய அணியில் சேர்க்கப்படாமல் இருக்கிறார்.
முதலில் அவர் உடல் தகுதியை நிரூபிக்கவில்லை என தேர்வு குழு விளக்கம் அளித்தது. அதன் பின் முழு உடல் தகுதியை எட்டி விட்டு ரஞ்சிப் கோப்பையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் விளையாடி மொத்தம் 15 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருக்கிறார்.

இந்த சூழலில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷமி சேர்க்கப்படவில்லை.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி, ஷமி அபாரமாக பந்துவீசி வருகிறார். அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கின்றார். நடந்து முடிந்த மூன்று ரஞ்சி போட்டிகளில் அவர் விளையாடிய விதத்தை நாம் அனைவருமே பார்த்தோம்.
தனி நபராக நின்று பெங்கால் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். கண்டிப்பாக ஷமியின் ஆட்டத்தை தேர்வு குழுவினர் கவனித்து வருகிறார்கள் என்று நினைக்கின்றேன். ஆனால் ஏன் சேர்க்கப்படவில்லை என்பது குறித்து அவரிடம் கண்டிப்பாக தெரிவித்து இருக்க வேண்டும். என்னை கேட்டால் நான் உடல் தகுதி மற்றும் திறமை என அனைத்திலும் பார்த்து ஷமியை கண்டிப்பாக தேர்வு செய்வேன்.
ஆனால் இந்தியாவுக்கு மீண்டும் அவரால் ஏன் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட முடியாது என்ற காரணம் எனக்கு தெரியவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி திறமை வாய்ந்த வீரர்களுடன் களமிறங்குகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா நன்றாக செயல்பட்டது.
ஆனால் இது இந்தியாவில் நடைபெறுகிறது. இங்கு இந்தியாவுடன் மோத வேண்டும் என்றால் நீங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே முடியும். இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் சுழற் பந்து வீச்சும் நன்றாக இருக்கின்றது. கில், ஜெய்ஸ்வால், ராகுல், பந்த் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்பிக்கை நமக்கு இருக்கிறது என கங்குலி கூறியுள்ளார்.