சென்சுரியன்: இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி பவுலிங்கில் தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் கிளாசன் ஹாட்ரிக் சிக்ஸ் விளாசியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கடந்த 2 போட்டிகளில் வருண் பவுலிங்கில் கிளாசன் ஆட்டமிழந்த நிலையில், இம்முறை மிரட்டல் கம்பேக்கை கொடுத்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடரில் இந்திய அணியின் வருண் சக்கரவர்த்தி மற்றும் தென்னாப்பிரிக்கா அதிரடி வீரர் கிளாசன் இருவருக்கும் நேரடி யுத்தம் களத்தில் நடந்து வருகிறது. ஏனென்றால் முதல் 2 போட்டிகளில் வருண் சக்கரவர்த்தி கிளாசனின் விக்கெட்டை எளிதாக வீழ்த்தினார்.

இதனால் ஸ்பின்னர்களுக்கு எதிராக கிளாசனின் அதிரடி ஆட்டம் குறைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமல்லாமல் இந்திய ரசிகர்கள் பலரும் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக திணறி வரும் கிளாசனுக்கு ஐபிஎல் தொடரில் ரூ.23 கோடி ஊதியம் அளித்து ரீடெய்ன் செய்தது வீண் என்று விமர்சிக்க தொடங்கினர். இதனால் கிளாசன் கம்பேக் கொடுப்பாரா என்ற கேள்வி இருந்து வந்தது.
அதுமட்டுமல்லாமல் வருண் சக்கரவர்த்தியிடம் இருந்து கிளாசனை காப்பாற்ற அந்த அணி நிர்வாகம் பேட்டிங் வரிசையை மாற்றியது கூடுதல் விவாதத்தை ஏற்படுத்தியது. ஆனால் 3வது டி20 போட்டியில் கிளாசன் எந்தவித பயமும் இல்லாமல் நம்பர் 5 வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கினார். வருண் சக்கரவர்த்தி வீசிய முதல் பந்தை கிளாசன் நிதானமாக எதிர்கொண்டார்.
இதன்பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் களத்தில் கிளாசன் - மில்லர் இருந்த போதே அக்சர் படேல் மற்றும் ரவி பிஷ்னாய் இருவரையும் பவுலிங் செய்ய வைத்தார். இருவரும் கட்டுக்கோப்பாக பவுலிங் செய்ததால், கிளாசன் மீது அழுத்தம் அதிகரித்தது. பின்னர் 14வது ஓவரை வீசுவதற்கு வருண் சக்கரவர்த்தி அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார்.
இதற்காகவே காத்துக் கொண்டிருந்த கிளாசன், க்ரீஸிற்கு அருகில் நின்று முதல் பந்திலேயே சிக்சரை விளாசினார். அப்போது விக்கெட் கீப்பராக நின்றிருந்த சஞ்சு சாம்சன், "மச்சி.. பின்னாடி நிற்கிறான்" என்று வருண் சக்கரவர்த்திக்கு எச்சரிக்கை கொடுத்தார். உடனடியாக வருண் சக்கரவர்த்தி லெந்தில் சின்ன மாற்றம் செய்து பவுலிங் செய்ய, அந்து பந்திலும் கிளாசன் அசால்ட்டாக சிக்சரை அடித்தார்.
3வது பந்திலும் கிளாசன் சிக்சர் அடித்து ஹாட்ரிக் சிக்ஸ் விளாசிய போது, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் உடனடியாக வருண் சக்கரவர்த்தியிடம் நேரடியாக சென்று பேசினார். அதன்பின் வருண் சக்கரவர்த்தி கொஞ்சம் ஒய்டாக பவுலிங் செய்ய, கிளாசன் அடித்த பந்து சூர்யகுமாரிடம் கைகளுக்கு சென்றது. ஆனால் அந்த கேட்சை தவறவிட்டார்.
பின்னர் 5வது பந்தில் அபாரமாக ஒரு பவுண்டரியை கிளாசன் அடிக்க, அந்த ஓவரில் மட்டும் மொத்தமாக 23 ரன்கள் குவிக்கப்பட்டது. இம்முறை வருண் சக்கரவர்த்தியிடம் விக்கெட் கொடுக்க கூடாது என்பதோடு மட்டுமல்லாமல் அட்டாக் செய்ய வேண்டும் என்று முன் முடிவுடன் கிளாசன் வந்தார். ஆனால் களத்தில் இருவரின் திட்டங்களும் செயல்பட்டது ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை அதிகரித்தது.