சந்திகார்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனிலையில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டுமே சொதப்பியது தான் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
சந்திகாரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் ரிசா ஹென்றிக்ஸ் 8 ரன்களில் ஆட்டம் இழந்தார். எனினும் மற்றொரு தொடக்க வீரரான குயிண்டன் டி காக் இந்திய பந்துவீச்சை மைதானத்தில் நான்கு பக்கத்திலும் சிதறடித்தார்.

ஐந்து பௌண்டரி, 7 சிக்ஸர்கள் என பறக்க விட்ட அவர் 46 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதுபோன்று எய்டன் மார்க்ரம் 29 ரன்களிலும், பிரவீஸ் 14 ரன்களிலும் ஆட்டம் இழந்தார். நடுவரிசையில் டொனவன் பெரேரியா மூன்று சிக்ஸர்கள் அடித்து 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.
இதேபோன்று அந்த அணியின் அனுபவ வீரரான டேவிட் மில்லர் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. இந்திய பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதனை அடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. கில் தாம் எதிர்கொண்ட முதல் பந்திலே கோல்டன் டக் அவுட் ஆகி ரசிகர்களை வெறுப்பேற்ற, இந்த சூழலில் நம்பர் மூன்றாவது இடத்தில் அக்சர் பட்டேல் வந்து மேலும் ரசிகர்களின் கோபத்தை அதிகரித்தார். இதனால் அபிஷேக் ஷர்மா மீது அழுத்தம் ஏற்பட்டது.
அவர் அதிரடி காட்ட இரண்டு சிக்சர் அடித்து எட்டு பந்துகளில் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். அக்சர் பட்டேல் பவர்பிளேவை சிறப்பாக வீணடித்தார். 21 பந்துகளை எதிர்கொண்டு அவர் 21 ரன்கள் தான் சேர்த்தார். மறுமுனையில் கேப்டன் சூரியகுமார் யாதவ் வழக்கம் போல் பேட்டிங்கில் 4 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே சேர்த்து தமது வேலை முடிந்துவிட்டது என நினைத்து பெவிலியன் திரும்பினார்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி தடுமாறிய நிலையில் இன்று தான் பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் களமிறங்க போகிறோம் என்று தெரியாமல் களத்திற்கு வந்த திலக் வர்மா அதிரடி காட்டினார். 27 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஹர்திக் பாண்டியா முதல் டி20 போட்டியில் நன்றாக விளையாடிய நிலையில் அவரும் இன்று பேட்டிங்கில் தடுமாறினார்.
23 பந்துகளை எதிர்கொண்ட அவர் 20 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதேபோன்று நடுவரிசையில் விளையாடிய ஜித்தேஷ் சர்மா இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் அடித்து விட்டு 17 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.
ஆட்டம் முடிய இன்னும் 11 பந்துகளை எஞ்சிய நிலையில் சிவம் துபே, எதற்கு களத்திற்கு வருகிறோம் என்று தெரியாமல் வந்து ஒரு ரன் மட்டும் எடுத்து பெவிலியனுக்கு சென்று விட்டார். இதனால் இந்திய அணி 19 புள்ளி ஒரு ஓவரில் 162 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. திலக் வர்மா 34 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 5 சிக்சர், இரண்டு பவுண்டரிகள் அடங்கும். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.