கட்டாக்: இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 74 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தாலும், 175 ரன்கள் என்ற இலக்கு எட்டக்கூடியதுதான் என்று தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். தோல்விக்குப் பிறகு பேசிய அவர், பிட்ச்சின் தன்மை மற்றும் பேட்டிங் சொதப்பல் தான் காரணம் என கூறி இருக்கிறார்.
கட்டாக்கில் நடந்த போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தென்னாப்பிரிக்கா வீழ்ந்தது. இது குறித்து மார்க்ரம் அளித்த விளக்கம் இதோ: "பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் நாங்கள் நன்றாகவே செயல்பட்டோம். போட்டியை நன்றாகத் தொடங்க வேண்டும் என்று திட்டமிட்டோம், அது நடந்தது. அதில் எங்களுக்குப் பெருமைதான். ஆனால் பேட்டிங்கை பொறுத்தவரை, டி20 கிரிக்கெட்டில் சில சமயங்களில் இப்படி நடப்பது சகஜம் தான். துரதிர்ஷ்டவசமாக அது தொடரின் முதல் போட்டியிலேயே நடந்துவிட்டது. இதை மறந்துவிட்டு அடுத்த போட்டிக்கு நகர வேண்டும்," என்றார்.

பேட்டிங் சரிவு குறித்துப் பேசிய அவர், ஆடுகளத்தின் தன்மையைச் சுட்டிக்காட்டினார். "பிட்ச்சில் கொஞ்சம் பந்து சிக்கி வந்தது. டென்னிஸ் பந்து போல அதிக பவுன்ஸ் இருந்தது. இன்னிங்ஸ் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு அது உதவியது" என்றார்.
பிட்ச் கடினமாக இருந்தாலும், இலக்கு எட்டக்கூடியதுதான் என்று மார்க்ரம் கூறினார். "175 ரன்கள் என்பது நாங்கள் ஏற்றுக்கூடிய இலக்குதான். இதை எங்களால் சேஸ் செய்திருக்க முடியும் என்று நம்பினோம். பந்துவீச்சில் இன்னும் ஒரு 10-15 ரன்களைக் குறைத்திருக்கலாம் என்று யோசிக்கலாம். ஆனால் நாங்கள் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை" என்று வருத்தம் தெரிவித்தார்.
இறுதியாகத் தோல்விக்கான முக்கிய காரணத்தைக் குறிப்பிட்ட அவர், "டி20 கிரிக்கெட்டில் சுதாரித்துக்கொள்ள அதிக நேரம் கிடைக்காது. எங்களால் சரியான பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை. விக்கெட்டுகள் விழுந்த பிறகு நிலைத்து நின்று, ஆட்டத்தின் போக்கை மாற்றத் தவறிவிட்டோம். அதுதான் எங்களைப் பாதித்தது.
இதைப் பற்றி அதிகம் ஆராய்ந்து குழப்பிக்கொள்ள விரும்பவில்லை. இந்தத் தோல்வியை இத்தோடு மறந்துவிட்டு, பாசிட்டிவாக அடுத்த போட்டியை அணுகுவோம்" என்று நம்பிக்கையுடன் கூறினார் மார்கிரம்.