அகமதாபாத்: டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, அதிக ரன் ரேட் பெற்றிருந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டு இருக்கிறது.
இந்த சூழலில் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க அணி கேப்டன் மார்க்கரம், அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், எங்கள் அணி வீரர்கள் இன்று சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். இன்று ஆடுகளம் வித்தியாசமாக இருந்தது.

எப்போதும் இங்கு இருக்கும் ஆடுகளத்திற்கும், இந்த ஆடுகளத்திற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. நாங்கள் இந்த ஆடுகளத்தை முன்பே கணித்து விட்டோம். அதற்கு ஏற்றார் போல் எங்களுடைய திட்டங்களை மாற்றிக் கொண்டோம். எங்களுடைய பவுலர்களை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கின்றேன். இந்தத் தொடர் ஆரம்பத்தில் எங்களுக்கு கடினமாக இருந்தது.
ஆனால் இன்று மிகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம். பேட்டிங்கில் பிரவீஸ் மற்றும் மில்லர் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறார்கள். பந்து வேகமாக மைதானத்தில் வரவில்லை என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். இதனால் ஃபில்டர்கள் இல்லாத இடத்தை நோக்கி பந்தை அடித்து அதிகம் ஆக ரன்கள் ஓடியே எடுத்தும்.
இந்திய அணியும் ஆரம்பகட்டத்திலும் இறுதி கட்டத்திலும் நல்ல முறையில் பந்து வீசினார்கள். எனினும் எங்கள் அணி வீரர்கள் ஆட்டத்தின் நடு பகுதியில் சிறப்பாக விளையாடினார்கள். இதுதான் இந்த போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று நினைக்கின்றேன். முதல் போட்டியில் வென்று விட்டோம், இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கின்றது. லுங்கி நெகிடி எப்போது பந்து வீசினாலும் அது எதிரணிக்கு ஆபத்தாக தான் இருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.
அவர் தனது திறமையை உணர்ந்து பந்து வீசி வருகிறார். இதன் மூலம் விக்கெட்டுகளை எடுத்து எங்களுக்கு வெற்றியைத் தேடித் தருகிறார். அடுத்த போட்டி எங்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் எதிராக இருக்கிறது. நாங்கள் அண்மையில் இரு அணிகலும் டி20 தொடரில் விளையாடினோம். வெஸ்ட் இண்டீஸ் அணி அபாயகரமான அணி. இந்த போட்டியில் நாங்கள் வென்று விட்டோம். அதை அப்படியே விட்டுவிட்டு அடுத்த போட்டிக்கு நகர வேண்டும். அது மிகவும் பெரியது என்று ஏய்டன் மார்க்கரம் கூறியுள்ளார்.