அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணியும், தென்னாப்பிரிக்க அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், தங்களுக்கு உள்ள சாதகமான அம்சங்கள் குறித்துத் தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் அஷ்வெல் பிரின்ஸ் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அகமதாபாத் மைதானத்தின் சீதோஷ்ண நிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மை தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு நன்கு பழக்கப்பட்டுவிட்டதால், அது இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தங்களுக்குக் கூடுதல் பலமாக அமையும் என்று அஷ்வெல் பிரின்ஸ் கூறி இருக்கிறார். 2026 டி20 உலகக்கோப்பையின் லீக் சுற்றில் தென்னாப்பிரிக்க அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகள் அகமதாபாத்தில் தான் நடைபெற்றன. அந்த மூன்றிலும் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றிருந்தது.
இது குறித்து செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "தொடரின் ஆரம்பத்திலேயே லீக் சுற்றுப் போட்டிகளை நாங்கள் இங்கு விளையாடியது எங்களுக்குப் பெரிய உதவியாக அமைந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் நீங்கள் அதிக போட்டிகளில் விளையாடும்போது, அங்குள்ள சூழல் உங்களுக்கு மிகவும் பரிச்சயமாகிவிடும். இது எங்களுக்குப் பெரும் சாதகமாக அமையும் என்று நினைக்கிறேன்" என்றார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், அந்தத் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றிருந்தது. அந்தத் தொடரின் அனுபவமும் தற்போது கைகொடுக்கும் என பிரின்ஸ் நம்புகிறார்.
"இந்திய அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியுள்ளோம். அதில் எங்களுக்குள் பல விஷயங்களைப் பரிமாறிக் கொண்டோம். எதிரணியின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பது இரு அணிகளுக்குமே நன்கு தெரியும். முன்கூட்டியே திட்டமிடும்போது, எதிரணி என்ன செய்யப்போகிறது என்பதை ஓரளவு கணித்து விளையாடுவது எங்களுக்குச் சிறந்த வழிகாட்டுதலாக இருக்கும். அந்த வகையில் கடந்த தொடரின் அனுபவம் எங்களுக்குப் பெரிதும் உதவும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் ஆழமானது என்பதை ஒப்புக்கொண்ட அவர், இந்திய அணியில் உள்ள அபிஷேக் சர்மா அல்லது இஷான் கிஷன் போன்ற ஒரு குறிப்பிட்ட வீரரை மட்டும் தாங்கள் குறிவைக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். ஒட்டுமொத்த அணியாக இந்தியாவை எதிர்கொள்வதே தங்களது திட்டம் என்று அவர் கூறினார்.
"இந்திய அணியில் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் எனச் சிறந்த வீரர்கள் பலரைக் கொண்ட ஒரு பெரிய பேட்டிங் வரிசையே உள்ளது. நாங்கள் எந்தவொரு தனிப்பட்ட வீரரையும் மட்டுமே குறிவைத்துத் திட்டமிடவில்லை. இந்தியா ஒரு வலுவான அணி என்பதால், ஒட்டுமொத்த அணிக்கும் எவ்வாறு நெருக்கடி கொடுப்பது என்பதில் தான் எங்களது கவனம் உள்ளது.
போட்டியின் முக்கியமான இடங்களில் நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய வீரர்களைத் தவறுகள் செய்யத் தூண்ட வேண்டும் என்பதே எங்களது திட்டம். இந்திய அணியை விட ஒரு ரன் கூடுதலாக எடுத்து வெற்றி பெற வேண்டும் என்று நம்புகிறோம். இது நிச்சயமாக ரசிகர்கள் விரும்பும் ஒரு சிறந்த போட்டியாக இருக்கும்" என்று அஷ்வெல் பிரின்ஸ் நம்பிக்கையுடன் கூறினார்.
லீக் சுற்றில் தோல்வியையே சந்திக்காத இரு பலம் வாய்ந்த அணிகள் இன்று மோதுவதால் இந்தப் போட்டியின் முடிவை அறிய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.