அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோல்வி அடைந்து தொடரை 3 - 1 என இழந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் தொடர்நாயகன் விருது வருண் சக்கரவர்த்திக்கு கொடுக்கப்பட்டது தவறு என்கிற ரீதியில் பேசியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்திக்கு 'தொடர் நாயகன்' விருது வழங்கப்பட்டது. ஆனால், எதிரணி பயிற்சியாளரோ வேறு ஒரு கணக்கை போட்டு இருக்கிறார்.

போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுக்ரி கான்ராட், "நான் வெளிப்படையாகவே பேசுகிறேன். பும்ரா சிறந்த பவுலர் தான், அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இரண்டு அணிகளுக்கும் இடையிலான உண்மையான வித்தியாசம் ஹர்திக் பாண்டியா தான்.
இன்றைய போட்டியில் அவர் ஆடிய அந்த இன்னிங்ஸ் தான் எங்களை தோற்கடித்தது. முதல் போட்டியிலும் அவர் எங்களை சிக்கலில் மாட்ட வைத்தார். அவர் தான் தொடர் நாயகன் விருதை வெல்வார் என்று நினைத்தேன். அவருக்கு விருது கிடைக்காதது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளிக்கிறது" என்று கூறினார்.
காயத்திலிருந்து மீண்டு வந்த ஹர்திக் பாண்டியா, இந்தத் தொடரில் ஆல்-ரவுண்டராக ஜொலித்தார். இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா 4 போட்டிகளில் 142 ரன்கள் எடுத்தார். மேலும், 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கடைசி போட்டியில் மட்டும் 25 பந்துகளில் 63 ரன்கள் மற்றும் முக்கிய விக்கெட்டான டிவால்ட் பிரேவிஸை வீழ்த்தினார்.
வருண் சக்கரவர்த்தி இந்தத் தொடரில் 4 போட்டிகளில் 10 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அவரது சராசரி 11.20 என மிகச் சிறப்பாக இருந்தது. அவர் விக்கெட் வேட்டை நடத்தியதால் அவருக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது நியாயம் தான் என்றாலும், போட்டியின் போக்கை மாற்றியதில் ஹர்திக் பங்கு அதிகம். ஹர்திக் பாண்டியா கடைசி போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த கடைசி போட்டியில் வருண் 4 விக்கெட்களை வீழ்த்திய போதும் அவருக்கு அந்த விருது வழங்கப்படவில்லை.