விசாகப்பட்டினம்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, இந்திய அணியை "மண்டியிடச் (Grovel) செய்வோம்" என்று ஆணவமாகப் பேசிய தென்னாப்பிரிக்கா தலைமைப் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட், தற்போது ஒருநாள் தொடரில் தோல்வியடைந்த பிறகு தனது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார். ஆனால், அவர் இதற்காக வெளிப்படையாக மன்னிப்பு கேட்காமல், "எனது நோக்கம் அதுவல்ல" என்று மழுப்பலாகப் பேசியது மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கவுகாத்தி டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியை பீல்டிங்கில் நீண்ட நேரம் நிற்க வைத்து சோதிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில், "இந்திய அணியை மண்டியிடச் செய்வோம் (grovel)" என்று கான்ராட் கூறியிருந்தார். இந்த 'Grovel' என்ற வார்த்தை வரலாற்று ரீதியாக இனவெறித் தாக்குதலுடன் தொடர்புடையது என்பதால், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்த பிறகு விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கான்ராட், அந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார். ஆனால் மன்னிப்பு என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை.
அவர் பேசுகையில், "இப்போது யோசித்துப் பார்க்கும்போது, யாருக்கும் தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் நான் அப்படிப் பேசவில்லை என்பது புரிகிறது. நான் வேறு ஒரு சிறந்த வார்த்தையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
இந்திய வீரர்கள் அதிக நேரம் களத்தில் நிற்க வேண்டும், அவர்கள் சோர்ந்து போக வேண்டும் என்பது மட்டுமே எனது சிந்தனையாக இருந்தது. வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதில் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் கெட்ட எண்ணம் எதுவும் இல்லை. 'பணிவு' என்பதுதான் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் அடிப்படை" என்று மழுப்பலாக பதில் அளித்தார் கான்ராட்.
அதாவது, "அந்த வார்த்தை தவறுதான், ஆனால் என் எண்ணம் தவறில்லை" என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். 1976-ம் ஆண்டு இங்கிலாந்து கேப்டன் டோனி கிரேக், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களைப் பார்த்து இதே வார்த்தையைச் சொல்லி இனவெறி சர்ச்சையில் சிக்கினார். அந்தச் சொல்லுக்கு "தரையில் ஊர்ந்து செல்வது" அல்லது "காலில் விழுவது" என்று பொருள்.
டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்தியபோது ஆணவமாகப் பேசியவர், இப்போது ஒருநாள் தொடரில் இந்தியாவிடம் அடி வாங்கிய பிறகு, "நோக்கம் அதுவல்ல" என்று பம்முவது வேடிக்கையாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.