கவுகாத்தி: இந்தியாவுக்கு எதிரான கவுகாத்தி டெஸ்டின் நான்காம் நாளில் தென்னாப்பிரிக்கா அணி தாமதமாக டிக்ளேர் செய்ததற்கான காரணத்தை தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் விளக்கியுள்ளார். இந்திய அணி 'மிகவும் சிரமப்பட வேண்டும்' என்பதற்காகவே இவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்தார்.
போட்டியின் இறுதி நாளில், முதல் செஷனில் பந்து புதிதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், இந்திய வீரர்கள் களத்தில் அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதற்காகவும் நீண்ட நேரம் பேட் செய்ததாக கான்ராட் கூறியுள்ளார். மதிய உணவுக்குப் பிறகும் பேட் செய்த தென்னாப்பிரிக்காவின் இந்த முடிவு விமர்சனத்திற்குள்ளானது, எனினும் ஆடுகளம் பெரிய அளவில் சிதையவில்லை.

மதிய உணவின்போது 508 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தாலும், தென்னாப்பிரிக்கா தொடர்ந்து பேட் செய்தது. ரவீந்திர ஜடேஜா டிரிஸ்டன் ஸ்டப்ஸை 94 ரன்களில் அவுட் செய்த பிறகுதான் அவர்கள் டிக்ளேர் செய்தனர். நான்காம் நாள் ஆட்ட முடிவில், பயிற்சியாளர் கான்ராட் அளித்த பேட்டியில், "புதிய பந்தை எப்படிச் சிறப்பாகப் பயன்படுத்துவது என்பதை நாங்கள் பார்த்தோம். காலையில் புதிய, பந்து கடினமான பந்தாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம்" என்றார்.
மேலும், "மாலை நேரத்தில் ஆடுகளத்தில் நிழல் விழும்போது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அது சாதகமாக இருக்கும். அதனால், சீக்கிரம் டிக்ளேர் செய்து அந்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. இந்திய வீரர்கள் களத்தில் அதிக நேரம் செலவிட வேண்டும், அவர்கள் 'மிகவும் சிரமப்பட வேண்டும்' என்று விரும்பினோம். அவர்களை முழுமையாக ஆட்டத்திலிருந்து வெளியேற்றி, 'இன்றிரவு ஒரு மணி நேரமும், கடைசி நாளும் வந்து சமாளித்துப் பாருங்கள்' என்று கூற விரும்பினோம்" என்று கான்ராட் தெரிவித்தார்.
இந்திய அணிக்கு 549 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், மார்கோ ஜான்சென் மற்றும் சைமன் ஹார்மர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 மற்றும் கே.எல். ராகுல் 6 ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தனர்.இதனால், 15.5 ஓவர்களில் 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. ஐந்தாம் நாளில் வெற்றி பெற மேலும் 522 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சவாலான நிலையில் இந்திய அணி உள்ளது.
இது குறித்து பேசிய கான்ராட் , "முதல் இன்னிங்ஸில் இரண்டு முழு நாட்கள் பேட் செய்ததன் விளைவுகளை நாங்கள் கண்டோம். பந்துவீச்சாளர்கள் களத்தில் அதிக நேரம் செலவிட்டனர். அது அவர்களுக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம்" என்றார்.மேலும், "குறிப்பாக புதிய பந்து, நிழல் விழுந்த ஆடுகளத்தில் ஓபனிங் பேட்ஸ்மேன்களுக்கு இன்று மாலை எளிதாக இருந்திருக்காது. நாளை மாலை நாங்கள் எட்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தால், 'நாங்கள் சொன்னோம் அல்லவா' என்று மக்கள் கூறுவார்கள்" என்று கான்ராட் கூறினார்.
"நாங்கள் எங்கள் சரியான தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டும். அது சரியாக அமையாவிட்டால், அமையவில்லை அவ்வளவே" என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த டெஸ்டில் இந்திய அணி டிரா செய்தாலும், ஏற்கெனவே 1-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலை வகிப்பதால், தொடரை இந்தியா இழந்திருக்கும்.