பார்ல் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு தென்னாப்பிரிக்க ரசிகர்கள் மரியாதை அளித்த செயல் புல்லரிக்க வைத்தது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் தன் முதல் சர்வதேச சதம் அடித்து அசத்தினார். பேட்டிங் செய்ய கடினமான பிட்ச்சில் அவர் திட்டமிட்டு ஆடி சதம் கடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அவர் சதம் அடித்து 108 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது போட்டியை காண வந்திருந்த தென்னாப்பிரிக்க ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவரது ஆட்டத்துக்கு மரியாதை அளித்தனர். அது மெய்சிலிர்க்கும் வகையில் அமைந்தது.

பொதுவாக எதிரணி வீரர் சதம் அடித்தால் கை தட்டுவார்கள். ஆனால், எழுந்து நின்று அவரை வழியனுப்புவது எல்லாம் அபூர்வமாகவே நடக்கும். அந்த வீரர் உண்மையிலேயே சிறப்பாக ஆடி இருக்கிறார் என மொத்த ரசிகர்களும் கருதினால் மட்டும் எழுந்து நின்று மரியாதை அளிப்பார்கள். அப்படி ஒரு மரியாதையை தான் சஞ்சு சாம்சன் பெற்று இருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காணும் ரசிகர்கள் எண்ணிக்கை சரிந்து வரும் நிலையில், இந்த சம்பவம் அந்த நாட்டில் இன்னும் நல்ல கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.
இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 296 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 108 ரன்கள் குவித்து இருந்தார் அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 218 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
தன் முதல் சர்வதேச சதம் அடித்ததன் மூலம் சஞ்சு சாம்சன், இனி இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக சஞ்சு சாம்சன் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெற முடியாமல் தவித்து வந்தார். அவருக்கு மிகச் சில போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் நீண்ட காலத்துக்கு பின் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சதம் அடித்து இருக்கிறார். பிசிசிஐ இனியாவது அவரை நிரந்தர இந்திய அணி வீரராக கருதுமா? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.