ஜோஹன்னஸ்பெர்க் : துருப்புச் சீட்டு வீரரை வைத்து சூர்யகுமார் யாதவ் விக்கெட் வீழ்த்த திட்டம் போட்டது தென்னாப்பிரிக்க அணி. ஆனால், அந்த திட்டத்தில் சிக்காமல் தப்பியதுடன் அதே ஓவரில் 23 ரன்கள் குவித்து, பதிலடி கொடுத்து கதிகலங்க வைத்தார் சூர்யகுமார் யாதவ்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் சுப்மன் கில் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். மூன்றாம் வரிசை வீரர் திலக் வர்மா டக் அவுட் ஆனார். இதை அடுத்து மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வால்-உடன் கூட்டணி அமைத்து ஆடினார் சூர்யகுமார் யாதவ்.

அதிரடி மன்னன் சூர்யகுமார் யாதவ் துவக்கத்தில் நிறைய டாட் பால்கள் ஆடினார். ஜெய்ஸ்வால் மட்டும் ஒரு பக்கம் அதிரடி ஆட்டம் ஆடி வந்தார். இதனிடையே தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ஆன்டில் இரண்டு ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து நம்பிக்கை அளித்து இருந்தார். அந்த இரண்டு ஓவர்களில் சூர்யகுமார் யாதவ் அதிக பந்துகளை சந்தித்த போதும் பவுண்டரி அடிக்கவில்லை. ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து இருந்தார்.
அதனால், அவர் தென்னாப்பிரிக்க அணியின் துருப்புச் சீட்டாக கருதப்பட்டார். அவரை இறக்கினால் சூர்யகுமார் யாதவ் அல்லது ஜெய்ஸ்வால் விக்கெட்டை வீழ்த்தி விடலாம் என திட்டம் போட்ட தென்னாப்பிரிக்க கேப்டன் ஐடன் மார்கிரம் ஆன்டிலை 13வது ஓவர் வீச அழைத்தார்.
அந்த ஓவரின் முதல் பந்தில் ஜெய்ஸ்வால் சிங்கிள் ரன் எடுக்க, அடுத்த ஐந்து பந்துகளையும் சூர்யகுமார் யாதவ் சந்தித்தார். அதில் சூர்யகுமார் மூன்று சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து தெறிக்க விட்டார். ஒரே ஓவரில் 23 ரன்கள் சேர்த்தது இந்திய அணி. அந்த ஒரு ஓவருக்கு பின் சூர்யகுமார் யாதவ் ஸ்ட்ரைக் ரேட் எகிறியது.
ஜெய்ஸ்வால் 60 ரன் எடுத்து அடுத்த ஓவரில் ஆட்டமிழந்த போதும் சூர்யகுமார் யாதவ் கடைசி ஓவர் வரை நின்று சதம் அடித்து ஆட்டமிழந்தார். முதல் 25 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ், அடுத்த 31 பந்துகளில் 73 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்க அணியை திணற வைத்தார். 56 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அவர் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 201 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி மோசமான பேட்டிங் ஆடி தோல்வியை நோக்கி சென்றது.