கொல்கத்தா: இந்தியா, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை நாளை கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த போட்டி குறித்து செய்தியாளர்களை சந்தித்த கில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதைப்பற்றி தற்போது பார்க்கலாம். இந்த இரண்டு போட்டிகளும் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நாங்கள் விளையாட வேண்டும் என்றால் இந்த போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்றாக வேண்டும். தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை அவர்கள் பலமானவர்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர்கள். எனவே அவர்களை வீழ்த்துவது என்பது எளிதான காரியமாக இருக்காது.
இந்த டெஸ்ட் போட்டியில் பல சவால்கள் இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆனால் ஒரே அணியாக நாங்கள் இந்த சூழலை பெரிதாக கையாளும் என்று நம்புகிறேன். பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிரான தொடரை தென்னாப்பிரிக்கா சமன் செய்திருக்கிறார்கள்.
தாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாம்பியன் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். ஆசிய கண்டங்களில் உள்ள ஆடுகளங்களில் தென் ஆப்பிரிக்கா போன்ற அணியை எதிர்கொள்வது என்பது எப்போதுமே கடினமான விஷயம். ஆனால் இந்த சவாலை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம் என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
கில் கடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இரண்டு டெஸ்ட் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டி என தொடர்ந்து விளையாடி வரும் கில் தற்போது வெறும் 5 நாள் இடைவெளியில் மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார்.
இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கில்லுக்கு t20 கிரிக்கெட்டில் ஓய்வு அளித்து இருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது என்றும், ஆனால் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அவரை சேர்த்து தற்போது கில்லின் பார்மை, இந்திய அணி நிர்வாகம் தேவையில்லாமல் முடிக்க போகிறது என்று ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.