இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 117 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றது.
இந்த சூழலில் மூன்றாவது டி20 போட்டி தர்மசலாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தனிப்பட்ட காரணங்கள் காரணமாக பும்ரா, இந்த போட்டியில் களமிறங்கவில்லை.

அவருக்கு பதிலாக ஹர்ஷித் ரானா விளையாடினார். இதேபோன்று அக்சர் பட்டேலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவருக்கு பதில் குல்தீப் விளையாடினார். இந்த சூழலில் ஹர்ஷித் ராணாவும், ஆர்ஸ்தீப் சிங்கும் அபாரமாக பந்துவீசி தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். குயின்டன் டிகாக் 1 ரன்னிலும், ரீசா ஹென்ரிக்ஸ் டக் அவுட் ஆகியும், சிஎஸ்கே வீரர் டிவால்ட் பிரவிஸ் 2 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
இதனால் தென்னாப்பிரிக்க அணி 7 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நான்காவது விக்கெட்டுக்கு மார்க்கரம் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்க போராடியது. ஆனால் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 9 ரன்களில் வெளியேறினார். தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் கார்பின் போஸ் நடு வரிசையில் விளையாட அவரும் 4 ரன்களில் வெளியேறினார்.
இதைப்போன்று தென்னாப்பிரிக்காவின் அதிரடி வீரரான மார்க்கோ யான்சன் 2 ரன்களில் ஆட்டம் இழக்க டொனவன் பெரேரியா 20 ரன்களில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார். ஒரு பக்கம் தென்னாப்பிரிக்க வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப மறுமுனையில் கேப்டன் மார்கரம் மட்டும் தனி ஆளாக நின்று அணியின் மானத்தை காப்பாற்றினார்.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 41 பந்துகளில் அரை சதம் கடந்தார். பின்னர் அதிரடி காட்டிய அவர் 46 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து ஆர்ஸ்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் தென்னாபிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 117 ரன்கள் என்ற கௌரவமான இலக்கை எட்டியது. இந்திய பவுலர்கள் ஆர்ஸ்தீப் சிங், ஹர்சித் ராணா, குல்தீப், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.