கொல்கத்தா: தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 124 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது முதல் இன்னிங்ஸில் அந்த அணி 159 ரன்களில் ஆட்டம் இழந்தது.
இதன் அடுத்து களமிறங்கிய இந்திய அணியும் பேட்டிங்கில் தடுமாறியது. எனினும் தென்னாப்பிரிக்கா எடுத்த முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 30 ரன்கள் கூடுதலாக எடுத்து, 189 ரன்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த நிலையில் 30 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென்னாபிரிக்கா தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. இதிலும் தென்னாப்பிரிக்க வீரர்கள் கடுமையாக தடுமாறினர். குறிப்பாக ஜடேஜாவின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அந்த அணி அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது.
மூன்றாவது நாள் ஆட்டம் தொடக்கத்தில் தென்னாபிரிக்க அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 93 என்ற ஸ்கோருடன் தொடங்கியது. கேப்டன் பவுமா 29 ரன்களும், கார்பின் போஸ் 1 ரன்னிலும் ஆட்டத்தை தொடந்தனர்.இந்த ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்க போராடியது. இந்த ஜோடியை பிரிக்க இந்திய அணி வீரர்கள் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டனர்.
கார்பின் போஸ் 25 ரன்களில் ஆட்டம் இழக்க தெம்பா பவுமா அரை சதம் அடித்து அசத்தினார்.இந்த ஜோடி எட்டாவது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்தது. இந்த பார்ட்னர்ஷிப்பை பும்ரா உடைத்தார். தனி ஆளாக தெம்பா பவுமா போராட மற்ற தென்னாப்பிரிக்க வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதன் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி 54 ஓவர் முடிவில் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பவுமா ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் உடன் களத்தில் இருந்தார். இந்திய பந்துவீச்சு தரப்பில் ஜடேஜா நான்கு விக்கெட்டுகளையும் சிராஜ் குல்தீப் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இதை அடுத்து 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தங்களுடைய கடைசி இன்னிங்சில் விளையாடுகிறது.