ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கடந்த பாகிஸ்தான் தொடரில் பங்கேற்காத அணியின் நிரந்தர கேப்டன் டெம்பா பவுமா, மீண்டும் அணிக்குத் தலைமை தாங்குகிறார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் இன்னும் மூன்று வாரங்களில் தொடங்க உள்ள நிலையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தனது 15 பேர் கொண்ட அணியை வெளியிட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக அணியில் மூன்று முக்கிய மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. கேப்டன் டெம்பா பவுமா அணிக்குத் திரும்பியுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் பிரெனலன் சுப்ராயன் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பேட்ஸ்மேன் டேவிட் பெடிங்ஹாம் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த மாற்றங்களைத் தவிர, அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் தங்கள் இடங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். வேகப்பந்து வீச்சுக்கு ககிசோ ரபாடா தலைமை தாங்க, மார்கோ ஜான்சன் அவருக்குப் பக்கபலமாக இருப்பார்.
சுழற்பந்து வீச்சுத் துறையில் அனுபவ வீரர் கேசவ் மஹாராஜ் உடன் சைமன் ஹார்மர் மற்றும் செனுரன் முத்துசாமி ஆகியோர் இந்திய ஆடுகளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக் காத்திருக்கின்றனர். பேட்டிங்கில் கேப்டன் பவுமா, எய்டன் மார்க்ரம் ஆகியோருடன் டேவால்ட் ப்ரீவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் போன்ற இளம் அதிரடி வீரர்களும் இடம்பெற்றுள்ளது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போது இந்திய டி20 அணி ஆஸ்திரேலியாவில் உள்ளது. அங்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. அதனிடையே தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிப்பு வெளியாகலாம் எனா எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்படும். அந்த அணியில் ஜெய்ஸ்வால், பும்ரா, கே எல் ராகுல், துருவ் ஜுரல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.