ராய்ப்பூர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவி இருக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது பனிப்பொழிவு காரணமாக இரண்டாவது பேட்டிங் செய்யும்போது அது சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 22 ரன்களும், ரோகித் சர்மா 14 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

இந்த சூழலில் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி, ருதுராஜ் ஆகியோர் அபாரமாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ருதுராஜ், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
மறுபுறம் விராட் கோலி தன்னுடைய 53வது ஒரு நாள் சதத்தை எட்டினார். இதை அடுத்து கேப்டன் ராகுல் இறுதியில் 43 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். ஜடேஜா 24 ரன்கள் எடுக்க 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்திருந்தது. 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களம் இறங்கியது.
தொடக்க வீரராக விளையாடிய குயிண்டன் டிகாக் 8 ரன்களில் ஆட்டம் இழக்க, இரண்டாவது விக்கெட்டுக்கு ஏய்டன் மார்க்கரம் உடன் கேப்டன் பவுமா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்த நிலையில் பவுமா 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
தொடக்க வீரராக களமிறங்கிய எய்டம் மார்க்கரம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்கு சிக்ஸர், 10 பவுண்டரிகளை எடுத்த அவர் 98 பந்துகளில் 110 ரன்கள் குவித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய நான்காவது சதத்தை அவர் எடுத்தார். ஒரு கட்டத்தில் வெற்றிக்கு தேவையான ரன்களும், எஞ்சிய பந்துகளுக்குமான இடைவெளியும் மிகவும் அதிகமாக இருந்தது.
இந்த சூழலில் சிஎஸ்கே வீரர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 34 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார். 5 சிக்சர், ஒரு பவுண்டரி எடுத்த நிலையில் அவர் ஆட்டம் இழந்தார். பிரவீஸ் ஆட்டம் போட்டியை தலைகீழ் திருப்பி போட்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மேத்தீவ் பிரிட்ஸ்க்கி 68 ரன்களில் வெளியேறினார்.
முதல் ஒருநாள் போட்டியில் அதிரடி காட்டிய மார்க்கோ ஜான்சன் இந்த போட்டியில் இரண்டு ரன்களில் வெளியேற அது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனால் இந்தியாவும் ஆட்டத்திற்குள் திரும்பி வந்தது. எனினும் தென்னாப்பிரிக்கா கீழ் வரிசை வீரர்கள் கடைசிவரை நின்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றனர். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்பிரிக்க அணி துரத்திய 3வது அதிகபட்ச இலக்கு இதுவாகும். இந்திய வீரர்கள் ஃபில்டிங்கில் கேட்சை விட்டது, பந்துகளை சரியாக தடுக்காமல் பவுண்டரி விட்டது, ஷமி போன்ற அனுபவம் வாய்ந்த பவுலர்கள் இல்லாமல் போனது தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.